Wednesday, February 29, 2012

கூடங்குளம் விவகாரத்தில் கருணாநிதி கேள்வி போராட்டக்காரர்களை தூண்டி விடுவது யார்?

Wednesday,February,29,2012
சென்னை::கூடங்குளம் விவகாரத்தில் போராட்டக்காரர்களை அரசு தூண்டிவிடுகிறதா அல்லது பின்னணியில் இருந்து உதவி செய்கிறதா என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினமான மார்ச் 1ம் தேதி, இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு ரூ.1 கோடியிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டை ஒய¢எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை வழங்கி, திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: ஸ்டாலின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு, 1 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பிறந்தநாள் விழாக்கள், நலிந்த ஏழை மக்களுக்கு பயன்பெறும் பொருட்களை வழங்குவதாக அமைய வேண்டும் என்று திமுக நீண்டகாலமாக பணியாற்றி வருகிறது. ஸ்டாலின், அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணத்தால் பெற்ற புகழையும் அதற்கான அடையாளமாக வந்த விருதையும் இங்கே புகழ்ந்து பாராட்டினார்கள். இதை காணும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

இந்த மேடையில், ஜெ.அன்பழகன் அரசியல் கலந்து பேசினார். அது அவர் குற்றம் அல்ல. இதற்கு முன்பு நடந்த இதுபோன்ற விழாவில் பேசியவர்கள் செய்த காரியங்களுக்கு பெறவேண்டிய பதிலை அவர் கூறியிருக்கிறார். திமுக ஆட்சியில் அங்கொன்று இங்கொன்றுமாக மின் தட்டுப்பாடு இருந்தது. மறுக்கவில்லை. தட்டுப்பாடு போக்க, டெல்லிக்கு ஓடி அலைந்து, பல மாநிலங்களுடன் தொடர்புகொண்டு மின்சாரத்தை கொண்டு வந்து மக்களை நிம்மதியாக இருக்க செய்த அரசு, திமுக அரசு. இன்று அதுவா நிலை? கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் காரியம் நடைபெறுகிறது. கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி ஆகும் நிலை இருந்தும் அதை புறக்கணித்து அது எங்களுக்கு தேவையில்லை, அதை மூடவேண்டும் என்று நடக்கும் போராட்டத்தை இந்த அரசு அனுமதிக்கிறதா? அல்லது விமர்சிக்கிறதா? என்றால் வாயை மூடிக்கொண்டு இருக்கிறது. கூடங்குளத்தில் போராடும் மக்களை இந்த அரசு தூண்டி விடுகிறதா? அல்லது பின்னணியில் இருந்து உதவி செய்கிறதா? என்றால் அதற்கு இதுவரை பதில் இல்லை. மவுனம் சாதிக்கிறார்கள். உண்மை தெரிந்தவர்கள் மனம் புழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். உலகம் உணர்ந்துகொண்டு இருக்கிறது. சிலர் வேறு வழியின்றி வெளியே சொல்கிறார்கள்.

கூடங்குளத்தில் உள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு மின் உற்பத்தி செய்ய உதவியிருந்தால் இந்நேரம் தமிழகம் இருளில் இருந்திருக்குமா? போராடுபவர்களுக்கு உதவி செய்ய பின்புலமாக இருந்து கிளர்ச்சியை செய்ய அனுமதித்துவிட்டு இன்று முடியும், நாளை முடியும் அல்லது முடியாமல் போகுமா? என்ற கேள்விகளை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறது. உண்மையை உணரும் வகையில் மக்களுக்கு விளக்கம் தரவேண்டிய கடமையை செய்ய இந்த அரசு ஏன் தவறிவிட்டது? கல்பாக்கம் அணுமின் நிலையம் எத்தனையோ ஆண்டுகளாக இருக்கிறது. இவர்கள் கூறும் ஆபத்து அங்கு ஏற்பட்டது உண்டா? ஆபத்துகளை தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருந்தது உண்டா? கல்பாக்கம் அணுமின் நிலையத்தை அனுமதித்துள்ள நாம், கூடங்குளத்தில் எதிர்ப்பவர்களுக்கு மறைமுக ஆதரவு காட்டுவது புரியாத புதிராக இருக்கிறது. மாநில அரசு மவுனமாக இருக்கிறது. எத்தனையோ குழுக்கள் அமைத்து ஆய்வு நடத்தி, அதை கேட்க தயாரில்லை என்று இருந்துவிட்டு கடைசியாக நால்வர் குழு அமைத்து நேற்று ஒரு அறிக்கை தருகிறார்கள்.

அமெரிக்க, ரஷ்ய இயந்திரங்கள் வேலை செய்கிறது என்பதால் அவை வெற்றி பெறக்கூடாது என்று குற்றச்சாட்டு ஒருபுறம். அப்படி இல்லை என்று மறுக்கும் நிலை ஒருபுறம் இருக்க, இடையில் அகப்பட்டுக்கொண்டு விழிப்பது அவர்களுக்கு ஓட்டு போட்ட தமிழக மக்கள்தான். தமிழகம் இருளில் மூழ்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் உங்களை நடுகாட்டில் விட்டுவிடுவார்கள் என்று ஏற்கனவே கூறினோம். இப்போது, பாதி தூரத்திலேயே நடுக்காட்டில் நிறுத்தியிருக்கிறார்கள். நாம் நலிந்த மக்களுக்கு உதவிகளை செய்வது நாளை வரப்போகும் தேர்தலுக்காக அல்ல. இந்த ஆட்சியில் ஜனநாயகத்தை ஏற்கிறார்களா என்றால் இல்லை. எதிர்க்கட்சிகளை நசுக்குவது எப்படி? சிறையில் போடுவது எப்படி? குண்டர் சட்டம் உள்பட அனைத்து சட்டத்தையும் பயன்படுத்தி சீரழிப்பது என்று மக்களை இந்த அரசு துவம்சம் செய்கிறது. இந்த அரசின் கொட்டம் அடக்க, ஆரவாரம் அடங்க, அராஜகம் ஒடுங்க, நாம் அனைவரும் ஆர்த்தெழ வேண்டும். அந்த நாள், விரைவில் வரும். அதை கொண்டாடி மகிழ உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment