Sunday, January 29, 2012சங்கரன்கோவில்::தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களின் ராஜகோபுரத்தில் செடி, கொடிகள் முளைத்துள்ளன. கோபுரத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இவற்றை அகற்ற கோயில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எந்த பிடிப்பும் இல்லாமல் ஸ்பைடர்மேன் போல கோபுரங்களில் ஏறி செடி கொடிகளை அகற்றும் பணியை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறார் சங்கரன்கோவிலை சேர்ந்த சங்கரன் (52). இவருக்கு மனைவி, ஒரு மகள், மனநிலை சரியில்லாத மகன் உள்ளனர்.
இவர் 30 ஆண்டுகளாக சங்கர நாராயணசுவாமி கோயிலில் சப்பரம் தூக்கி வரும் பணியில் ஈடுபட்டிருந்தார். வயது முதிர்வால் சுமை தூக்க முடியாமல் அவதிப்பட்ட இவர், குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கோயில் ராஜகோபுரங்களை பாழ்படுத்தி வரும் செடி, கொடிகளை அகற்றும் பணியில் இறங்கினார். எவ்வளவு பெரிய கோபுரமாக இருந்தாலும், கயிறையோ, கருவிகளையோ பயன்படுத்தாமல் ஏறி இறங்குகிறார்.
இதுகுறித்து சங்கரன் கூறுகையில், ‘‘சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம், உடுமலைப்பேட்டை, திருவாடானூர், திருச்செந்தூர், தென்காசி, பண்பொழி, திருமலைக்கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களின் கோபுரங்களில் இந்த பணியை செய்து வருகிறேன். ஒரு கோபுரத்தில் 10 முதல் 15 நாட்கள் வரை வேலை இருக்கும். கோயில் நிர்வாகத்தின் மூலம் தினமும் ரூ.300 வீதம் சம்பளம் தருவார்கள். இதை வைத்து குடும்பம் நடத்தி வருகிறேன். நிரந்தர ஊதியம் நிர்ணயம் செய்து கொடுத்தால், அரசு உத்தரவிடும் அனைத்து கோயில்களின் கோபுரங்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட வாய்ப்பாக இருக்கும்’’ என்றார்.
No comments:
Post a Comment