Tuesday, January 31, 2012

ஸ்பாட் பைன் அதிரடி ரூ.15 லட்சத்தை தாண்டியது வசூல்!

Tuesday, January 31, 2012
சென்னை::வாகனங்களுக்கான ஸ்பாட் பைன் நேற்று முதல் உயர்த்தி வசூலிக்கப்பட்டது. முதல் நாளே ரூ.15 லட்சத்துக்கு மேல் வசூலானது. சென்னையில் கடந்த சில நாட்களாக வாகன விதிகளை மீறுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, நகர் முழுவதும் 200 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் தெருவுக்குத் தெரு நின்று விதிகளை மீறுகிறவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

முன்பு அபராத தொகை கட்டுவதற்கு ரசீது வழங்கப்பட்டது. இப்போது, நவீன இயந்திரம் வழங்கப்பட்டு, அதில் இருந்து ரசீது வழங்கப்படுவதோடு, இயந்திரத்திலேயே வாகன ஓட்டிகளின் கையொப்பமும் பெறப்படுகிறது. இதனால் முறைகேடு நடப்பது தடுக்கப்படுகிறது. இந்நிலையில், எவ்வளவுதான் அபராதம் விதித்தாலும், தொடர்ந்து சிலர் விதிமுறைகளை மீறி வருகின்றனர். குறிப்பாக, பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை. இதனால், கட்டணத்தை அதிகரித்து வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முதல் அபராதக் கட்டணம் அதிகரித்து வசூலிக்கப்பட்டது.

வழக்கம்போல நேற்றும் 200 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் காலை முதல் நள்ளிரவு வரை அபராதத் தொகையை வசூலித்தனர். அதில் நேற்று மட்டும் சுமார் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதன் மூலம் ரூ.15 லட்சத்துக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை இவ்வளவு பணம் வசூலானதில்லை. முதல் முறையாக அதிகமான அபதார கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் பலரும் பல இடங்களில் குறைந்த அளவே பணம் கொண்டு வந்ததாக, போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். ஆனாலும், போலீசார் பணத்தை வசூலித்த பிறகே வாகனத்தை எடுக்க அனுமதித்தனர். இதனால், இன்று முதல் ஓரளவு வாகன விதிமுறை மீறல்கள் குறைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment