Friday, December 30, 2011

இனப்பிரச்சினை தீர்வு யோசனைகளில் காணி பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ரணில்/ சோமவன்ச/பொன்சேகா/கரு/சஜித் ஆகியோரின் நிலைபாடுகள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்-மனோ கணேசன்!

Friday, December,30, 2011
இலங்கை::இனப்பிரச்சினை தீர்வு யோசனைகளில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் போர்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இராணுவ முகாம்கள் அகற்றப்படுவது ஆகிய முக்கிய விவகாரங்கள் தொடர்பில் இந்நாட்டின் பிரதான கட்சித் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, சோமவன்ச அமரசிங்க, சரத் பொன்சேகா, கரு ஜெயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோர் தத்தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

அதற்கான தீர்மானக்கரமான காலம் இன்று வந்து விட்டது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தை புதிய நகர மண்டபத்தில் இன்று (30) நடைபெற்ற நவ சம சமாஜ கட்சியின் 34ம் வருடாந்த மகாநாட்டிலே, ஜனநாயகத்தின் குழப்ப நிலையும், தேசிய இனப்பிரச்சினையும் என்ற தலைப்பில் சிங்கள மொழியிலே சிறப்பு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

முப்பது ஆண்டுகால யுத்தத்திற்கு பிறகு தமிழர்களுக்கு உரித்தான தேசிய உரிமைகளை முறைப்படி வழங்குவதற்கு சிங்கள தேசிய அரசியல் தலைமைகள் தயாரா, இல்லையா என்று உலகிற்கு அறிவிக்க வேண்டிய வேளை இன்று வந்து விட்டது.

புலிகளின் இராணுவ தோல்வியை தமிழ் மக்களின் வீழ்ச்சியாக கருதுகிறோமா அல்லது அதை பயங்கரவாதத்தின் தோல்வியாக மாத்திரம் கருதுகிறோமா? புலிகளின் இராணுவ தோல்வியை பயன்படுத்திக்கொண்டு முழு நாட்டையும் சிங்கள பௌத்த நாடாக மாற்றி அமைக்கும் கொள்கையுடன் உடன்படுகிறோமா?

புலிகள் தோல்வி அடைந்துவிட்டதனால் இனி தமிழர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் உடன்பட்ட அதிகார பரவலாக்களையும்கூட வழங்ககூடாது என்ற கொள்கையுடன் உடன்படுகிறோமா ஆகிய கேள்விகளுக்கு பிரதான தேசிய எதிர்கட்சி தலைவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

இனப்பிரச்சினையின் இன்றைய தீர்வில்லா நிலைமைக்கு, அரசாங்க கட்சியினர் மட்டும் அல்ல, அனைத்து பிரதான கட்சிகளும் பொறுப்பு கூறவேண்டும். எனவே அரசாங்கத்தின் கடுமையான போக்குகளை தாம் அங்கீகரிக்கின்றோமா, இல்லையா என்பதை பிரதான எதிர்கட்சி தலைவர்கள் சொல்ல வேண்டும்.

சிங்கள அரசியல் தலைமைகளின் அடிப்படை நிலைப்பாடுகள் என்ன என்பது பற்றி தெரிந்துகொள்ள தமிழர்கள் இன்று விரும்புகிறார்கள். அடிப்படைகளை தீர்மானிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியம் இல்லை. எத்தனையோ தெரிவுக்குழுக்கையும், ஒப்பந்தங்களையும் கண்டுவிட்ட தமிழர்கள் மீண்டும் தெரிவுக்குழுக்களுக்கு செல்ல விரும்பாததின் பின்னணி இதுதான் என்பதை தென்னிலங்கையின் பிரதான தேசிய அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தில் இடம்பெறும் இடதுசாரி தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, டியு.குணசேகர, திஸ்ஸ விதாரண ஆகியோரும் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இடதுசாரி தலைவர்கள் அரசாங்கத்திற்கு வெள்ளை அடிக்கும் வேலையை கைவிட்டு தமது இடதுசாரி பாரம்பரியத்திற்கு இனியாவது விசுவாசமாக நடந்துகொள்ளவேண்டும்.

தெரிவுக்குழுவிற்கு வாருங்கள் என அரசாங்கத்தின் சார்பில் அழைப்புவிடுக்கும் அரசில் உள்ள இடதுசாரி அமைச்சர்களுக்கு இதை தெரிவிக்க விரும்புகிறேன்.

ஜனநாயகத்தின் அனைத்து குணாம்சங்களையும் இந்த அரசு படிப்படியாக கைவிட்டு வந்து விட்டது. அதன் கடைசிப்படிகள் 18 ம் திருத்தமும், கடைசி கட்ட போரும்தான்.

இந்நாட்டில் இன்று அரசாங்கத்திடம் இருப்பது சர்வதிகார போக்கு ஒன்றுதான். இன்றைய அரசாங்கம் ஒரு பேரினிவாத, சர்வதிகார அரசாங்கம். இதுபற்றி ஆராய நாம் பட்டிமன்றம் நடத்த வேண்டியது இல்லை. வடக்கிலே, கிழக்கிலே மற்றும் அன்று கொழும்பிலே தமிழர்களுக்கு எதிராக கொண்டு செல்லப்பட்ட அனைத்து அரச பயங்கரவாத நடவடிக்கைகளும் இன்று தெற்கிலே முன்னெடுக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு அப்பால் எதிர்க்கட்சி ஜனநாயக போராட்டங்களை பார்த்தால் இன்னொரு கொடுமையான பயங்கர உண்மை புரிகிறது. ஜனநாயகத்தைப்பற்றி உரக்க குரல் எழுப்பும் தென் இலங்கை எதிரணி ஜனநாயக வீரர்களிடம் இருப்பது ஒற்றைக்கண் ஜனநாயகம்தான்.

தென் இலங்கையிலே சிங்கள சமூகத்தை பாதிக்கும் விவகாரங்களை பற்றி மாத்திரம் குரல் எழுப்பும், கண்டுகொள்ளும், போராட்டங்களை முன்னேடுக்கும் இவர்களின் போக்குகளை பார்த்து தமிழ், முஸ்லிம் மக்கள் இன்று வெறுப்பு அடைந்து உள்ளார்கள்.

சரத் பொன்சேகாவின் விடுதலை பற்றி பேசுபவர்களுக்கு நாம் நீண்ட காலமாக சிறை வாழ்க்கை வாழும் எங்கள் தமிழ் உடன் பிறப்புகளை பற்றி ஞாபகப்படுத்தினாலும் ஞாபகம் வருவதில்லை. பாரத லக்ஷ்மனின் படுகொலை பற்றி பேசுபவர்களுக்கு நாம் ரவிராஜ், மகேஸ்வரன் ஆகியோரது படுகொலைகள் பற்றி எடுத்து கூற வேண்டியுள்ளது.

போரின் கடைசி கால கட்டத்தில் படுகொலை செய்யப்பட்டதாக உலக மன்றம் எடுத்து கூறும் பல்லாயிரக்கணக்கான தமிழ் அப்பாவி மக்களை பற்றி இங்கே எவருக்கும் அக்கறை இல்லை. தென்னிலங்கையிலே கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள சில ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்களை பற்றி பேசுபவர்களுக்கு கொழும்பில் காணாமல் போயுள்ள சுமார் 500 தமிழர்களை பற்றியும், வட - கிழக்கில் போருக்கு முன் கடத்தப்பட்டு காணாமல் போன சுமார் 5000 தமிழர்களை பற்றியும் அக்கறை இல்லை.

சரத் பொன்சேகாவின் விடுதலை, பாரத லக்ஷ்மன் படுகொலை மற்றும் தெற்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் நாம் அக்கறை கொண்டுள்ளோம். இவை சம்பந்தமான போராட்டங்களில் நாம் முதல் இடம் வகிக்கின்றோம். அதில் பல சந்தர்ப்பங்களில் இங்கே இருக்கும் பல ஜனநாயக வீரர்களை விட நாம் இவற்றில் தீவிரமாக கலந்து கொள்கின்றோம்.

1971, 1989 ஆகிய காலகட்டங்களில் தென்னிலங்கையில் நடைபெற்ற அரசுக்கு எதிரான ஆயுதம் தூக்கிய போராட்டங்களில் இறந்து போன போராளிகளுக்கு கொழும்பிலே வருடா வருடம் பகிரங்கமாக அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஆனால் யுத்தத்தில் இறந்து போன அப்பாவி மக்களுக்குகூட அஞ்சலி செலுத்த முடியாத நிலைமை வடக்கிலும், கிழக்கிலும் நிலவுவது இங்கே எவருக்கும் பிரச்சினையாக தெரியவில்லையா? கோயில்களிலும், தேவாலயங்களிலும் மணி அடிக்க கூட முடியாத அரச பயங்கரவாதம் அங்கு நிலவுவது இங்கே எவருக்கும் கொடுமையாக தெரியவில்லையா? வடக்கிலே, கிழக்கிலே இறந்து போன போராளிகளின் கல்லறைகளை புல்டோசர் போட்டு உடைத்தபோது அந்த பிள்ளைகளை பெற்ற தாய் உள்ளங்கள் என்ன பாடு பட்டிருக்கும் என்று தென்னிலங்கையில் சிங்கள ஜனநாயக தலைவர்களுக்கு தெரியவில்லையா?

தமிழ் போராளிகள் பயங்கரவாதிகள் என்றால், 1971, 1989 ஆகிய காலகட்டங்களில் தென்னிலங்கையில் நடைபெற்ற அரசுக்கு எதிரான ஆயுதம் தூக்கிய சிங்கள போராளிகள் யார்? இங்கே சிங்கள போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என்றால், வடக்கிலே ஏன் தமிழ் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாது? போரில் மாண்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாது?

எமது மக்கள் பிரச்சினைகளில் தென்னிலங்கை ஜனநாயக வீரர்களின் போக்கு மிகவும் பாராமுகமாக உள்ளது. இதை தான் நான் ஒற்றைக்கண் ஜனநாயகம் என்று சொல்கிறேன். தென் இலங்கையிலே தமிழர்களின் உணர்வுகளையும் புரிந்து ஏற்றுகொள்ளும் காலம் வரும்வரைக்கும் தென் இலங்கைக்கும் சுதந்திரம் இருக்காது. வட இலங்கைக்கும் சுதந்திரம் இருக்காது. முழு இலங்கைக்கும் உரித்தான பொது போராட்டம் நடைபெற முடியாது.

இந்த பின்னணியில்தான் இன்று நவ சம சமாஜ கட்சியின் முக்கியத்துவம் புரிகிறது. அதன் வரலாறு புரிகிறது. அது மட்டும் அல்ல, எங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு எங்களை மாக்சிஸவாதிகள் ஆகுங்கள் என்று யாரும் இங்கே நிபந்தனை போட முடியாது, அதை கலாநிதி விக்கிரமபாகு செய்வதில்லை.

ஜேவிபியுடன் கூட நாம் பொது விஷயங்களில் இணைந்து செயல்பட்டுள்ளோம். எவருடனும் இணைந்து செயல்படுவதில் தமிழர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை அற்ற, அவை பற்றி பேசுவதற்குகூட தயங்கும் நபர்களுடன், கட்சிகளுடன் நாம் எப்படி இணைந்து செயபடுவது என தமிழ் மக்கள் கேட்கிறார்கள். தமிழ் மக்களின் குரலையே நான் இன்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் என்ற முறையில் எதிரொலிக்கின்றேன்.

என்று மனோ கணேசன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment