Tuesday, November 29, 2011

சில உள்ளூர் ஊடகங்கள் கூட நாட்டில் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தவும் பிரிவினையைத் தூண்டவும் மாதிரியே செயற்படுகின்றன-முருகேசு சந்திரகுமார்!

Tuesday, November 29, 2011
சில உள்ளூர் ஊடகங்கள் கூட நாட்டில் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தவும் பிரிவினையைத் தூண்டவும் பாதிப்புக்களை அதிகரிக்கவும் கூடிய மாதிரியே செயற்படுகின்றன என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

2012 வரவு செலவுத் திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான விவாதத்தில் அவர் மேலும் ஆற்றிய உரை!

கௌரவ சபாநாயகர் அவர்களே!

வரவு செலவுத் திட்டம் தொடர்பான இந்த உரையிலே நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான விடயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

யுத்தத்திற்குப் பின்னர் முன்வைக்கப்படுகின்ற மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இதுவாகும். யுத்தம் முடிந்தபிறகு ஒரு இயல்பு வாழ்வை நோக்கி மக்கள் பயணம் செய்யும் சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் இது. அமைதியும் ஆறுதலும் உருவாகிக்கொண்டிருக்கின்ற ஒரு சூழலில் இந்த வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுக் கிளர்ச்சியினாலும், யுத்தத்தினாலும் மக்கள் தங்களுடைய வாயையும் வயிற்றையும் கட்டி வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். ஆகவே, அந்தச் சந்தப்பத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டங்கள் அரசாங்கத்தின் மீதான நெருக்கடியையும் நாட்டின் மீதான அச்சுறுத்தலையும் முறியடிக்கும் விதத்திலேயே அமைந்திருந்தன.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும் மக்களின் நலத்திட்டங்களையும் விட பாதுகாப்புக்கான கரிசனையே அதிகமாக இருந்தது. எனவே, வரவு செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாதுகாப்பு செலவீனத்திற்கான நிதி ஒருக்கீடு அதிகரித்துக்கொண்டே வந்தது.

இப்போது யுத்தம் முடிந்துவிட்டது. ஆகவே, மக்களிடம் முற்றிலும் வேறான எதிர்பார்ப்புக்கள் தோன்றியுள்ளன. இவ்வளவு காலமும் தமது தேவைகளை மட்டுப்படுத்தி வாழ்ந்த மக்கள், உருவாகியிருக்கும் புதிய சூழலில் தங்கள் எதிர்பார்ப்புக்களையும் முன்னேற்றத்துக்கான திட்டங்களையும் நிறைவேற்றுவதற்காகக் காத்திருக்கிறார்கள். இதில் இன மத பிரதேச வேறுபாடுகள்; இன்றி அனைவரும் ஒருமுகப்படுத்தப்பட்டே இருக்கின்றனர்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

யுத்தம் முடிந்து 2 ½ வருடங்கள் கடந்துவிட்டன. அநியாயச் சாவுகளுக்கும் அகதிப் பெருக்கத்திற்கும் அலைச்சலுக்கும் பெரும்பாலும் முடிவு காணப்பட்டுள்ளது. ஆனால், மழைவிட்டாலும் சாரல் விடவில்லை என்பதைப்போல யுத்தம் ஒழிந்தாலும் அதன் காரணமாக உருவாகிய சில பாதிப்புக்கள் இன்னும் முற்றாக நீங்கிவிடவில்லை.

ஒரு பக்கத்தில் பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கும், இயல்பு வாழ்வை நோக்கி நகருவதற்கும் காத்திருக்கும் மக்கள். மறு பக்கத்தில் சில அரசியல் தரப்புக்களும் ஊடகங்களும் யுத்த சூழலை மேலும் தக்கவைத்துக் கொள்ள எத்தனிக்கும் முயற்சிகள். இந்த நிலையில் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இயல்பாகவே நெருக்கடிகள் ஏற்படுகின்றன. இந்த நெருக்கடிகள் நாட்டை மேலும் பாதிப்புள்ளாக்கும்.

யுத்தம் நடைபெற்ற எல்லாத் தேசங்களிலும் எதிர்கொள்ளப்பட்ட, அல்லது எதிர்கொள்ளப்படுகின்ற ஒரு பிரச்சினை இது. அரசியல் இலாபங்களுக்காக மக்களையும், நாட்டையும் பலியிடும் தரப்பினர் இன்னும் அதே உற்சாகத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் செயற்பாடுகள் உருவாக்கப்படும் வரவு செலவுத் திட்டத்தை பாதிக்கின்றன. அல்லது திசைமாற்றுகின்றன. யுத்தம் முடிந்த பின்னர் அரசியல் தீர்வை நோக்கியும் அமைதியை நோக்கியும் சிந்திக்க வேண்டிய பலர் அதற்கு எதிர்விதமாக சிந்திக்கின்றார்கள். செயற்படுகின்றார்கள்.

சில உள்ளூர் ஊடகங்கள் கூட நாட்டில் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தவும் பிரிவினையைத் தூண்டவும் பாதிப்புக்களை அதிகரிக்கவும் கூடிய மாதிரியே செயற்படுகின்றன.

மாறி மாறி ஒவ்வொரு தரப்பினரையும் குற்றம் சுமத்துவதாலும் விமர்சிப்பதாலும் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை. கடந்த கால அனுபவங்களைப் பெறுமதியான பாடமாகக் கொண்டு எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதே நிகழ்காலத்தின் கடப்பாடாகும். இதில் இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் முழுப்பொறுப்புண்டு. அவ்வாறு இந்தப் பொறுப்பை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து செயற்படும் போதே மக்கள் எதிர்பாக்கின்ற, மக்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுகின்ற ஒரு வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்க முடியும்.

இந்த உண்மையை நான் கடந்த ஆண்டு நடைபெற்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது தெளிவாக வலியுறுத்தியிருந்தேன்.

நாட்டில் யுத்தத்திற்கு முடிவு காணப்பட்டாலும் யுத்த அபாயக் கருக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன.

இது பகிரங்கமான ஒரு விடயமாகும். இந்த நிலை நீடிக்கும் வரை வரவு செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீடு என்பது பாதுகாப்புச் செலவீனங்களை அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். இது எமது விருப்பத்திற்கு அப்பாலானதாக இருக்கலாம். அல்லது நாட்டினுடைய பொருளாதாரத்தின் பெரும்பகுதியை இத்தகைய ஒதுக்கீட்டுக்கு செலவழிப்பது அதிக சுமையாகக் கருதப்படலாம். ஆனால் இந்த நிலையை மாற்றும்வரை இந்த நிலைக்கு முகம்கொடுப்பதாகவே அமையும்.

இங்கே இந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகுறித்த ஆதரவையோ விமர்சனங்களையோ நான் முன்வைக்கவில்லை. வரவு செலவுத்திட்டத்தின் ஒதுக்கீடுபற்றிய காரணத்திற்கான காரணங்களையே நான் தெரிவித்துள்ளேன்.

ஆகவே, நாட்டில் அபிவிருத்தி என்பதும் மக்களின் முன்னேற்றம் என்பதும் நாட்டின் அரசியல் ஸ்திரத்திரத் தன்மையிலும் அமைதியிலுமே தங்கியுள்ளது. எனவேதான் அமைதிச் சூழலை நிலைப்படுத்த வேண்டும் என்று நாம் அழுத்தமாக வலியுறுத்துகிறோம். அத்தகைய சூழலை உருவாக்காமல் அல்லது அதற்காக விசுவாசமாகச் சிந்திக்காமல் ஏனைய விடயங்களைப் பற்றிப் பேசுவதோ விமர்சிப்பதோ பொருத்தமானதாக அமையாது.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

நாட்டிலுள்ள சகல மக்களும் ஏராளம் கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் இருக்கின்றனர். இந்த அரசாங்கம் பாரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இந்தச் சூழலில் தான் நாம் இந்த வரவு செலவுத்திட்டத்தையும் எதிர்வரும் ஆண்டையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களைச் சீரமைத்து அந்த மக்களையும், யுத்தப் பிரதேசத்தையும் மீள்நிலைப்படுத்த வேண்டிய அவசியப்பணி இன்றுள்ளது. நாட்டிலுள்ள சகல மக்களையும் சகல பிரதேசங்களையும் சமநிலைப்பட்ட ஒரு பொதுத்தளத்திற்கு முதலில் கொண்டுவரவேண்டும்.

எமது மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் மகிந்த சிந்தனையின் அடிப்படையும் இதையே வலியுறுத்துகின்றது. அத்தகைய ஒரு நிலை எட்டப்பட்டால்தான் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்ற திட்டங்களும் சட்டங்களும் விதிமுறைகளும் அனைவருக்கும் பொதுவாக ஏற்புடையதாகும். இல்லையெனில் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களை அந்தத்திட்டங்கள் சென்றடைவதில் பிரச்சினைகள் உருவாகும். அதேபோல அந்தத் திட்டங்களை எதிர்கொள்வதில் மக்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படும்.

இந்த வகையில் யுத்தத்திற்குப் பின்னர் மீண்டும் அந்தப் பிரதேசங்களில் மக்கள் மீள் குடியேற்றப்படுவது முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும். ஆனால், இந்த மக்கள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதே இங்குள்ள பிரதான தேவையாக இருக்கின்றது. இந்த வரவு செலவுத்திட்டத்தில் இந்த மக்கள் மீதான கவனம் கூடுதலாகக் கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

குறிப்பாகப் புனர்வாழ்வுக்கும் மீளமைப்புக்கும் கூடுதலான கவனத்தைக் கொள்ளவேண்டும். இந்த மக்கள் மீள்வாழ்வுக்குத் திரும்புவதில் கால நீட்சி ஏற்படுமானால் அது அந்த மக்களின் வாழ்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் அவர்களது சமூக வாழ்விலும் நெருக்கடிகளை உருவாக்கும். அத்துடன் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் அவர்கள் பங்களிப்பதில் தாமதங்களையே ஏற்படுத்தும். அரசாங்கத்தின் உயரிய இலட்சியமாகிய அனைத்துப் பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்தல், அனைத்து மக்களையும் அபிவிருத்தியில் பங்குபற்ற வைத்தல் என்ற நோக்கத்திற்கு இது நேர்மாறாக அமையலாம். ஆகவேதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட ஒதுக்கீடும் சிறப்புத்திட்டங்களும் அவசியம் என்று கூறுகிறேன்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களுக்குள்ள தேவைகளையும் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளையும் மூலதனமாக்கியே சில அரசியல் தரப்புகளும் ஊடகங்களும் தங்களை வளர்த்துக்கொள்கின்றன. இந்தத் தரப்புக்களின் செயற்பாடு என்பது சாதாரணமானதல்ல. முழுநாட்டையுமே நெருக்கடிக்குள்ளாக்குவது.

இந்தத் தரப்புக்கள் கண்டுபிடிக்கும் குறைபாடுகளை இல்லாமல் செய்வதன் மூலம் இவர்களைப் பலவீனப்படுத்துவது மட்டுமல்ல, முழுநாட்டுக்குமான பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இல்லையெனில், இதனால் நாடு முழுவதுக்குமான தீர்மானங்களும் திட்டமிடல்களும் பாதிப்படையும். இந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவுக்கான அதிகரித்த ஒதுக்கீடு என்று ஏனைய குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு அடிப்படைக் காரணம் அடிப்படைப் பிரச்சினைகளின் நீட்சியே. ஆகவே, பாதிக்கப்பட்ட மக்களை மீள்நிலைக்;கு கொண்டுவருவதும் அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதும் முக்கியமானதாகும். எமது அரசாங்கம் இந்த விடயங்களில் கூடுதலான கவனத்தினை எடுக்கும் என்று நம்புகின்றோம்.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும் பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றம் காண்பதிலும் தன்னுடைய அக்கறையை வெளிப்படுத்துவார் என்று நம்பிக்கை வைத்துள்ளோம். நான் முன்னரே குறிப்பிட்டதைப் போல நாடு முழுவதிலும் உள்ள மக்கள் எதிர்பார்க்கும் ஒரே குறிக்கோள் அமைதியும் அபிவிருத்தியுமே. அதை நோக்கிச் சிந்திப்பதே எமது பணியாகும் என நான் நம்புகிறேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

வட பகுதியின் பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அங்கே செயலிழந்த நிலையில் இருக்கும் தொழில் மையங்களை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவரவேண்டியுள்ளது. இதன்; மூலம் வேலையற்ற நிலையிலிருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும். அதே வேளை அங்கே இருக்கும் மூல வழங்களைப் பயன்படுத்தவும் முடியும். நாட்டின் அபிவிருத்திக்கு அந்தப் பிரதேச மக்களின் பங்களிப்பு அவசியமானது.

போரின் காரணமாக சிதைவடைந்த பொருளாதாரமும் சிதைவடைந்த வாழ்வும் சிதைவடைந்த சமூகமாக அங்குள்ள மக்களின் வாழ்க்கை உள்ளது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என்ற சிறப்புத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றமை ஒரு முக்கியமான விடயம் என்றபோதிலும் இதையும் விட மேலதிகமான தேவைகளை அந்த மக்கள் கொண்டுள்ளனர்.

குறிப்பாக உட்கட்டுமானங்களை மீளமைக்கவேண்டிய அவசியப்பணி அங்கேயுண்டு. உட்கட்டுமானங்களின் வளர்ச்சியானது அந்த மக்களின் சுயபொருளாதாரத்தில் ஒரு பிரதான பாத்திரத்தை வகிக்கும் என்பதை தாங்கள் அறிவீர்கள். அங்குள்ள பல பிரதேசங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் தொடர்ந்தும் இருக்கின்றன. இந்த நிலை தொடரும்போது இந்த மக்களையும் அவர்களுடைய நிலையையும் சாட்சியமாக வைத்து சர்வதேச நெருக்கடியை உருவாக்குவதற்கு எதிர்த்தரப்புக்குச் சாத்தியமாகிறது.

எனவேதான் நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறோம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிறப்புத் திட்டங்களை கூடிய கவனமெடுத்துச் செயற்படுத்த வேண்டுமென்று. விவசாயம், கடற்றொழில் போன்ற தொழில் வாய்ப்புக்களுக்கான கூடுதல்; வசதிகளை இந்த மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

கிடைத்துள்ள இயல்புச் சூழலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி உழைப்பதற்கு இந்த மக்கள் தயாராக உள்ளனர். ஆனால் உதவிகளும்; ஆதரவுமே இவர்களுக்குத் தேவைப்படுகிறது. இதற்கான திட்டத்தையும் நிதி ஒதுக்கீட்டையுமே இந்த மக்கள் எதிர்பார்த்துள்ளனர். குறைந்த பட்சம் வட்டியில்லாத கடன் என்ற அளவிலாவது இவர்களுக்கான உதவிகளை செய்யவேண்டும். மேலும் கல்வி, மருத்துவம், மின்சாரம், கைத்தொழில், போக்குவரத்து போன்ற அவசிய துறைகளிலும் விரைவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டமும் கூடுதல் ஒதுக்கீடும் தேவைப்படுகிறது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆறுதலை உள்ளடக்கி இருக்குமானால், அது வரவேற்கத் தக்கதாகும். எனவே, இந்த வரவு செலவுத்திட்டத்தில் கவனிக்கப்படவேண்டிய முக்கியமான அடிப்படைகளை நாம் பொருட்படுத்தி அந்த இலக்கு நோக்கிச் செயற்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். யுத்தமற்ற இலங்கையை, அமைதியான நாட்டை அனுபவிக்கக் கூடிய ஒரு சூழல் எமது மக்களுக்கு வேண்டும். பொருளாதார அபிவிருத்தியிலும் அரசியல் சுதந்திரத்திலும் ஜனநாயக அடிப்படைகளிலும் மேம்பட்ட ஒரு வாழ்க்கை எமக்கு வேண்டும். அந்த இலட்சியத்தை நோக்கி நாம் செயற்படுவோம் என்று கேட்டு என்னுடைய உரையை முடித்துக் கொள்கின்றேன். என்றார்.

No comments:

Post a Comment