Tuesday, November 22, 2011தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வை முன்வைத்த அரசாங்கம் இன்று தனது சக்திக்கு மீறிய இராணுவத்தை தொடர்ந்து சுமந்து செல்லவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழர் பிரச்சினைக்கு இராணுவத்தீர்வை தேடிய அரசாங்கம் எதிர்காலத்தில் நாட்டின் குறிப்பாக சிங்கள மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் இராணுவத் தீர்வையே காண்பதற்கு தன்னை தயார்படுத்துகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இராணுவத் தீர்வுக்காக இந்நாட்டின் பொருளாதாரத்தால் தாங்கமுடியாத ஒரு இராணுவத்தை அரசாங்கம் கட்டியெழுப்பியுள்ளது. இராணுவம், விமானப்படை, கடற்படை பொலிஸ், ஊர்காவற்படை உள்ளடங்கிய சுமார் நான்கு லட்சம் நபர்களை கொண்ட ஆளணியை தொடர்ந்து கட்டிக்காக்கவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
இதனாலேயே வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கென 230 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சுகாதாரத்துறைக்கு 74 பில்லியனும் கல்வித்துறைக்கு 33 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது அரசாங்கம் எதற்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
இதற்கு மேலதிகமாக சுமார் 30000 மில்லியன் ரூபாய் இராணுவத்தினரின் குடியிருப்பு மற்றும் நலன்புரி விவகாரங்களுக்காக ஒதுக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் நான்கு வருடங்களில் 15000 மில்லியன் ரூபாய் இந்த இராணுவ நலன்புரி திட்டங்களுக்காக மேலும் ஒதுக்கீடு செய்ய உத்தேசித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக ஒவ்வொரு வருடமும் குறை நிரப்புப் பிரேரணைகளை சமர்ப்பித்து மேலும் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வது இந்த அரசாங்கத்தின் வழமையான நடவடிக்கை ஆகும். இதனால் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், புனர்வாழ்வு, வீடமைப்பு ஆகிய மக்கள் நலன்புரித் துறைகளுக்கு இன்று ஒதுக்கியுள்ள குறைந்தளவு தொகை மேலும் குறைவதற்கு நிச்சயமாக வாய்ப்பு இருக்கின்றது.
சுமார் நான்கு லட்சம் ஆளணியை கொண்ட பாரிய இராணுவத்தை குறைப்பதற்கு அரசாங்கம் விரும்பவில்லை. பயிற்சிபெற்ற இராணுவ வீரர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பினால் அது எதிர்காலத்தில் தமக்கு எதிராக மாறிவிடும் என அரசாங்கம் அஞ்சுகின்றது.
எனவே இது ஒரு புலிவாலை பிடித்த பட்ஜெட் ஆகும்: விடவும் முடியாது: வைத்திருக்கவும் முடியாது. நீண்ட காலத்திற்கு இராணுவத்திற்காக பெருந்தெகைகளை ஒதுக்கியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இந்த அரசாங்கம் இருக்கின்றது. இதையே இந்த வரவு செலவுத் திட்டம் வெளிப்படுத்துகின்றது.
No comments:
Post a Comment