Sunday, September 04, 2011
கும்பகோணம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் அதற்கு பதிலாக அவர்கள் சாகும் வரை சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் மணிசங்கர் அய்யர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் கலந்துரையாடல் கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய அவர் மேலும் கூறியது:
ஒவ்வொரு ஊராட்சியிலும் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட வேண்டும். குறிப்பாக, இளைஞர் காங்கிரஸôர் பெருமளவு இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை இன்று முதல் தொடங்க வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. அதிற்குப் பதிலாக இந்த மூவர் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 32 பேரையும் அவர்கள் இயற்கையாக சிறையிலேயே மரணம் அடையும் வரை தண்டனை அளிக்க வேண்டும். தீவிரவாதி அஜ்மல் கசாப்பையும் இதுபோலவே வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்.
உலகில் உள்ள 139 நாடுகளில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. 23 நாடுகளில்தான் இந்த தண்டனை உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 22 நாடுகளில் 67 பேரை தூக்கிலிட்டுள்ளனர். இந்தியாவில் ஒருவர்கூட தூக்கிலிடப்படவில்லை.
ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டாம் என்றால், அவர்கள் ஆயுள் தண்டனை பெற்று மீண்டும் வெளியே வந்தால், அவர்களால் வேறு பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்றார் மணிசங்கர் அய்யர்.
No comments:
Post a Comment