Sunday, August 21, 2011

போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் தாம்பரத்தில் பா.ஜ.உண்டியல் குலுக்கல்:காங்.அரசு தமிழர்களை கொல்கிறது:பொன்.ராதாகிருஷ்ணன்!

Sunday, August 21, 2011
தாம்பரம் : இலங்கையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவும் வகையில், கடந்த 13ம் தேதி முதல், நிதி திரட்டும் பணியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. தாம்பரம் பா.ஜ., சார்பில், சண்முகம் சாலையில் நிதி திரட்டப்பட்டது. கட்சியின் தமிழக துணைத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கடைதோறும் சென்று உண்டியல் குலுக்கி நிதி திரட்டினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

காங்.அரசு தமிழர்களை கொல்கிறது:பொன்.ராதாகிருஷ்ணன்!
நாகர்கோவில் : காங்., அரசு தமிழர்களை கொலை செய்து வருகிறது என நாகர்கோவில் நகர பா.ஜ., சார்பில் நகரபகுதிகளில் நடந்த இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நிவாரணம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கான, இலங்கை தமிழர் மறுவாழ்வு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இலங்கையில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு நிதி திரட்ட பா.ஜ., முடிவு செய்து அதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் நகர பா.ஜ., சார்பில் நேற்று நாகர்கோவில் மணிமேடை ஜங்ஷனில் நிதி திரட்டும் பணி நடந்தது.

நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிதிதிரட்டும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது;- இலங்கையில் தங்களுடைய உரிமைகளுக்காக போராடிய தமிழ் சமுதாயத்தை அழிக்கும் விதமாக ராஜபக்ஷே அரசு போர்புரிந்து லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். மூன்று லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கணவனை இழந்து வாடுகின்றனர். மேலும் கோயில்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மறுவாழ்வு நிதி உதவி செய்ய பா.ஜ., சார்பில் கடந்த 13ம் தேதி முதல் நிதி திரட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிதியை பா.ஜ., சேவா பிரிவு மூலம் அளிக்க உள்ளோம்.

மத்திய காங்., அரசு கடந்த 2009ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என கூறியது. ஆனால் வீடுகள் கட்டப்படவில்லை. காங்., அரசு தமிழர்களை கொலை செய்யும் அரசாக செயல்படுகிறது. தமிழக முதல்வர் தி.மு.க., கட்டிய புதிய தலைமை செயலக கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் தேவ், மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்கம், ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் மீனாதேவ், மாநில மகளிரணி பொதுச்செயலாளர் உமாரதி, கோட்ட அமைப்புசெயலாளர் கிருஷ்ணன், பிரசார அணி தலைவர் மணி, இளைஞரணி தலைவர் ஜெகசெல்வன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோபகுமார், வர்த்தகபிரிவ தலைவர் ஜெயசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறுவர்த்தக நிறுவனங்களில் சென்று நிதி திரட்டினர்.

No comments:

Post a Comment