Tuesday, August 23, 2011

நாடு முழுவதும் மத்திய மந்திரிகள், எம்.பி.க்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் நடத்தினர்!

Tuesday, August 23, 2011
வலுவான லோக்பால் சட்டத்துக்கு ஆதரவாக தனது ஆதரவாளர்கள் மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் வீடுகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று அன்னா ஹசாரே அழைப்பு விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

அன்னா ஹசாரேயின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் மாலையில் டெல்லி தீன்மூர்த்தி சாலையில் உள்ள மத்திய மனித வள மேம்பாட்டு மந்திரி கபில் சிபல் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கபில் சிபல் வீட்டு முன் நேற்று காலையிலும் 40 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். உடனே போலீசார் அவர்களை கைது செய்தனர். டெல்லி தல்கோத்ரா பகுதியில் உள்ள மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி வீட்டு முன்பும் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மத்திய அரசின் லோக்பால் சட்ட மசோதாவை தயாரித்த குழுவில் இடம் பெற்ற பிரணாப் முகர்ஜி மற்றும் கபில் சிபிலுக்கு எதிராக அவர்கள் அப்போது கோஷம் போட்டனர். மத்திய சுற்றுலாத்துறை மந்திரி சுபாத்காந்த் சகாயின் வீடு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ளது. நேற்று அவரது வீட்டு முன் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் மேடை போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அப்போது சுபாத்காந்த் சகாய் வீட்டில் இல்லை. அவர் டெல்லி சென்றதாக அவரது உதவியாளர் தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித், மத்திய மந்திரி பேணி பிரசாத் வர்மா ஆகியோரின் வீடுகள் முன்பு கறுப்பு கொடி போராட்டத்தையும், தர்ணா போராட்டத்தையும் ஹசாரே ஆதரவாளர்கள் நடத்தினர்.

மத்திய மந்திரிகள் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், ராஜீவ் சுக்லா ஆகியோரின் வீடுகள் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மும்பையில், மத்திய மந்திரி மிலிந்த் தியோரா வீடு முன்பு தர்ணா நடத்தப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிட்ட போது அசாம் மாநிலம் சர்மோத்திரா என்ற இடத்தில் மறைந்த முன்னாள் முதல்- மந்திரி சைகியாவின் மனைவி ஹேம்பிரவாவின் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார்.

தேர்தல் பணியாற்றுவதற்காக மட்டுமே ஒரு சில முறை பிரதமர் மன்மோகன்சிங் அங்கு சென்று தங்கியுள்ளார். தற்போது அந்த வீடு பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. அந்த வீடு அருகே அன்னாஹசாரேயின் ஆதரவாளர்கள் நேற்று மேடை போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் சட்டம் இயற்றக் கோரியும் கோஷம் எழுப்பினார்கள்.

அதே பகுதியில் உள்ள பாரதீய ஜனதா எம்.பி. சக்கரபர்த்தி வீட்டு முன்பும் அன்னா ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். டெல்லி மோதிலால் நேரு ரோட்டில் உள்ள முதல்- மந்திரி ஷீலாதீட்சித் வீடு முன் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழலில் அவரது தொடர்பு குறித்து கோஷம் எழுப்பினார்கள்.

இதுபோல, பல்வேறு மாநிலங்களில் எம்.பி.க்கள் வீடு முன்பும் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில், பாரதீய ஜனதா எம்.பி. அசோக் அர்கால் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில், காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான அசாருதீன், பா.ஜனதா எம்.பி.க்கள் முரளி மனோகர் ஜோஷி, லால்ஜி தண்டன் உள்பட 8 எம்.பி.க்களின் வீடுகள் முன்பு அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சரிகாசிங் பகேல் எம்.பி. வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தபோது, அவர் வீட்டை விட்டு வெளியே வந்து, ஹசாரேவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். சில எம்.பி.க்கள் வீட்டை விட்டு தப்பிஓட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. மும்பை மற்றும் தானேவில், முன்னாள் மத்திய மந்திரி சுனில்தத்தின் மகள் பிரியா தத், முன்னாள் மத்திய மந்திரி குருதாஸ் காமத் உள்பட 8 எம்.பி.க்களின் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவசேனா எம்.பி. சஞ்சய் நிருபம், டெல்லி செல்வதற்காக மும்பை விமான நிலையத்துக்கு வந்தபோது, அவரை முற்றுகையிட்டனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலும் ஒரு காங்கிரஸ் எம்.பி. வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதள எம்.பி.க்கள் 2 பேர், சப்கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டெல்லிக்கு சென்று கொண்டிருந்தனர். பககா ரெயில் நிலையத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள், அந்த ரெயிலில் இருந்து 2 எம்.பி.க்களையும் வெளியே அழைத்து வந்தனர்.

ஜன் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தால்தான், டெல்லி செல்ல விடுவோம் என்று நிர்ப்பந்தித்தனர். அதை ஏற்று, இருவரும் ஜன் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தனர். அதன்பிறகே இருவரையும் விடுவித்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் வீட்டு முன்பும், சிகாரில் மத்திய பழங்குடியினர் மேம்பாட்டுத்துறை ராஜாங்க மந்திரி மகேஷ் ஜோஷி வீட்டு முன்பும் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

No comments:

Post a Comment