Thursday, July 21, 2011ஆலாலசுந்தரத்தை தோற்கடித்து பாராளுமன்றம் சென்றபின் ஆனந்தசங்கரி செய்த துரோகங்களை கிளிநொச்சி மக்கள் மறக்கமாட்டார்கள்
தமிழரசுக் கட்சியின் வீரசிங்கமாம் ஆலாலசுந்தரத்தை எதிர்த்துப் போட்டியிட்டு 500 பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்ற ஆனந்தசங்கரி அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செய்தவற்றை கிளிநொச்சி வாழ் மக்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள் என்று கிளிநொச்சி வாழ் மைந்தன் எழுதியிருக்கும் கடிதத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இவர் ஏ-9 வீதிக்கு அருகில் பல ஏக்கர் காணியில் சிங்கள பாடசாலை அமைப்பதற்கு ஒப்புதல் கொடுத்தார். ஜே.வி.பி. இளைஞர்களை சிறைவைப்பதற்காக அக்கராயன் பாடசாலையை அரசாங்கத்துக்குக் கொடுத்ததுடன், இங்கு இராணுவ முகாம் அமைப்பதற்கும் வழியேற்படுத்திக்கொடுத்தார். ஆனந்தசங்கரி தானாகவே கைநீட்டி பணம் பெறாவிட்டாலும் கிருஷ்ணராசா அண்ணன் என்பவர் மூலம் பல இலட்சம் பணம் பெற்றுக்கொண்டும் எவருக்கும் வேலைவாய்ப்பையும் வழங்கவில்லையென்றும் இந்தக் கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சியை தனிமாவட்டமாக ஆக்கியவன் நானே என்று ஆனந்தசங்கரி கொக்கரிப்பதிலும் உண்மை உண்டு. ஆனாலும் அது கிளிநொச்சி மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கோ அல்லது நிதி ஒதுக்கீடுகளை பெறவேண்டும் என்ற நோக்கிலோ செய்யப்பட்ட பணியல்ல. கிளிநொச்சியை தனித்தேர்தல் மாவட்டமாக்கி தானும், தனது கைப்பொம்மையான கிருஷ்ணராசாவும் தொடர்ந்து பதவிவகிப்பதற்காகவே இத்திட்டத்தை வகுத்துக்கொண்டார் என்றும் கிளிநொச்சி வாழ் மைந்தன் மேலும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணன் அமிர்தலிங்கத்தின் சாணக்கியத்தால் தனிமாவட்டமாக்கியும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டமாகாது போனதையும் நாம் அறிவோம். அதேநேரத்தில் இவர் தமிழரசுக் கட்சித் தொண்டர்களை தனது ஆட்களை வைத்து அடிப்பித்ததையும் நாம் அறிவோம் என்றும் இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியாக போரை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு ஆனந்தசங்கரி அரசுக்கு தோள்கொடுத்து உதவியது ஒரு மிகப்பெரிய காரியமாகும். இதனை சம்பந்தன் மறுக்கலாம், சேனாதியும் மறக்கலாம். ஆனால் ஆனந்தசங்கரியின் சாதனையை கிளிநொச்சி மண் மறக்காது என்றும் இவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment