Tuesday, December 31, 2013

வடக்கு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 18 பேர் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியல்!

Tuesday, December 31, 2013
இலங்கை::வடக்கு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 18 பேர் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் நேற்று மாலை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேஷமூர்த்தி தெரிவித்தார்.

அவர்களின் 03 படகுகளையும் காங்கேசன்துறை மீன்பிடித் துறைமுகத்தில் தடுத்துவைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவு பிறப்பித்தார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக தமிழகத்தின், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊர்காவற்துறை பகுதியில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இந்த வாரம் தமிழக அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக இந்திய பிரதமர் தெரிவித்ததாக, தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தமிழக மீனவர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசாங்கம் கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இலங்கை மற்றும் தமிழக மீனவ பிரதிநிதிகள் இடையே எதிர்வரும் 20 ஆம் திகதி பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த நடவடிக்கை பேச்சுவார்த்தை மீதான நம்பிக்கையை இல்லாது செய்துள்ளதாக தி.மு.க தலைவர் குறிப்பிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment