Monday, July 15, 2013

வடக்குத் தேர்தல் விடயத்தில் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழ் மக்களின் அழுத்தங்களுக்கு அமையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்கள் இடம்பெறுகின்றன: பஷில் ராஜபக்ஷ!

Monday, July 15, 2013
இலங்கை::வடக்குத் தேர்தல் விடயத்தில் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழ் மக்களின் அழுத்தங்களுக்கு அமையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்கள் இடம்பெறுகின்றன. மாறாக கூட்டமைப்பின் முடிவுகள் வடக்கை அடிப்படையாக வைத்து எடுக்கப்படவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தினாலும் ஆரோக்கியமான போட்டியை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வடக்கில் ஐந்து மாவட்டங்களுக்கும் வேட்பாளர் அணித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். முதலமைச்சர் யார் என்பதனை மக்களே தீர்மானிக்கவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய பிரச்சினையை தீர்க்காமல் அதில் தொடர்ந்து அரசியல் செய்யவேண்டும் என்ற நோக்கத்தினாலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பும் ஐ.தே.க.வும் கலந்துகொள்ளாமல் உள்ளன. இறுதி நேரத்திலாவது அந்தக் கட்சிகள் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

வடக்குத் தேர்தலுக்கான தயார் நடவடிக்கைகள் குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது

வட மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழப்பத்தில் உள்ளதாக தெரிகின்றது. ஆனால் கூட்டமைப்பு சம்பந்தப்பட்ட விடயமாகும். அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் ஆரோக்கியமான போட்டியை எதிர்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளது. வடக்குத் தேர்தல் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானங்கள் வடக்கை அடிப்படையாகக்கொண்டு இடம்பெறவில்லை.

மாறாக வடக்குத் தேர்தல் குறித்த கூட்டமைபபின் முடிவுகளும் தீர்மானங்களும் புலி ஆதரவு புலம் பெயர் மக்களினால் தீர்மானிக்கப்படுகின்றது. அவர்களின் பிரதிநிதிகளாகவே கூட்டமைப்பு செயற்பட்டுவருகின்றது. வடக்கு மக்களின் நிலைமைகள் குறித்து வெளியில் இருந்து தீர்மானிக்கப்படுவது ஆரோக்கியமானதாக அமையாது. வடக்கு மக்களின் விவகாரங்கள் குறித்து வடக்கு மக்களே தீர்மானம் எடுக்கவேண்டும். ஆனால் கூட்டமைப்பை பொறுத்தமட்டில் வெளியில் இருந்தே தீர்மானங்கள் வருகின்றன. ஆனால் அரசாங்கமானது வடக்கு மக்களின் ஆணையையே கோரி நிற்கின்றது.

இதேவேளை 13 ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்துகொள்ளாமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் இறுதி நேரத்திலாவது தெரிவுக்குழுவில் இணைந்துகொண்டு தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தமது பங்களிப்புக்களை வழங்கும் என்று நம்புகின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் தேசிய பிரச்சினைக்கு ஒரு உரிய தீர்வு கிடைப்பதை விரும்பவில்லை என்றே தெரிகின்றது. இந்தப் பிரச்சினை தொடர்ந்து இழுத்தடிக்கப்படுவதன் மூலம் தாங்கள் அரசியலை செய்யவே இந்தக் கட்சிகள் எதிர்பார்க்கின்றன.

அன்று புலிகளை தோற்கடிக்கும் செயற்பாட்டிலும் எதிர்க்கட்சிகள் முழுமையான பங்களிப்பை வழங்கவில்லை. எனினும் சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான அரசு வெற்றியை அடைந்தது. அதேபோன்று தற்போதைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்காது உள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் வந்தாலும் வராவிட்டாலும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுப்போம். எம்மால் ஒரு தீர்க்கமான முடிவுக்கு செல்ல முடியும். ஆனால் இறுதி தருணத்திலாவது இந்த இரண்டு கட்சிகளும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறும் என்று நம்புகின்றோம்.

எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டு தெரிவுக்குழுவுக்கு பங்களிப்பு வழங்காவிட்டாலும் மக்களிடம் தேவையான கருத்துக்களை பெற்று நாங்கள் ஒரு முடிவுக்குவருகின்றோம். தேசிய பிரச்சினை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொறுப்பின்றி செயற்படுகின்றமை நன்றாக தெரிகின்றது என்றார்.

No comments:

Post a Comment