Thursday, April 25, 2013

சர்வதேச ஊடகங்கள் இலங்கையை கொலைப்பூமியாக காட்ட முயன்றன: கடந்த அரசுகளால் புலிபயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட முடியாத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்திற்கு முடிவு கட்டினார்: அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!

Thursday, April 25, 2013
இலங்கை::சர்வதேச ஊடகங்கள் இலங்கையை கொலைப்பூமியாக காட்ட முயன்றன: கடந்த அரசுகளால் புலிபயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட முடியாத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்திற்கு முடிவு கட்டினார்: அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!
 
புலிபயங்கரவாதத்தில் இருந்து நாட்டை முழுமையாக விடுவிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையானது மோதல் தீர்வே தவிர யுத்தமல்ல. எந்த நாட்டிலும் இவ்வாறான மோதல் தீர்வில் ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.
இலங்கையிலும் ஊடகங்கள் இதில் முக்கிய பங்காற்றியதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். குறிப்பிட்ட வரையறைக்குள் அநேக விடயங்கள் குறித்து சார்க் நாடுகளிடையே கலந்தாலோசிக்க முடியும். ஆனால் மற்ற நாட்டு உள்விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்ய முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சார்க் தகவல் நிலையம் ஏற்பாடு செய்திருந்த சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும் மோதல் தீர்வில் ஊடகங்களின் பங்களிப்பும் என்ற தொனிப்பொருளிலான மாநாடு நேற்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பமானது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
இந்த மாநாட்டில் சார்க் நாட்டு தூதுக்குழுவினர் பங்கேற்றனர். மேஜர் ஜெனரல்
பிரசாத் சமரசிங்க பிரதான உரையாற்றினார். இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் கூறியதாவது; 30 வருட யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது. இத்தகைய மோசமான மோதல் உலகில் பல நாடுகள் முகம்கொடுத்தன. பயங்கரவாதத்திலிருந்து நாட்டை முழுமையாக மீட்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2006 ஆம் ஆண்டு முடிவு செய்தார். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நம்பிக்கையும் பொறிமுறையும் அவருக்கிருந்தது.
இந்த விடயத்தில் ஊடகங்களின் பங்கு பிரதானமானது என்பதால் அது குறித்து ஜனாதிபதி என்னுடன் ஆராய்ந்தார். ஊடகங்களை சரியாக கையாளாவிட்டால் யுத்தத்திற்கு முடிவு கட்டுவது கடினம் என்பதை ஜனாதிபதி அறிந்திருந்தார். அதன்படியே ஊடக மத்திய நிலையம் உருவாக்கப்பட்டது. நானும் இதில் பங்காளியாக இருந்தது குறித்து பெருமை அடைகிறேன்.
 
சார்க் நாடுகள் பூகோள ரீதியில் ஒன்றுபட்டு செயற்படுகின்றன. ஏனைய நாட்டு உள்விவகாரங்களில் தலையிடாது செயற்படுவதன் மூலம் எமக்கு தொடர்ந்து ஒன்றாக செயற்பட முடியும். சார்க் எனும் கப்பலுக்கு சுழல் காற்று, பாரிய அலைகள் என எந்த சவால் வந்தாலும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் முகம் கொடுக்க முடியும். ஒருவருக்கொருவர் தன்னிச்சையாக உதவலாம். எமக்கு ஒன்றுபட்டு செயற்படக்கூடிய பல விடயங்கள் உள்ளன.
30 வருட யுத்தத்தின் பின்னர் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. சமாதானத்தை கட்டியெழுப்புதலும் மோதல் தீர்வில் ஊடகங்களின் பங்களிப்பும் என்ற தலைப்பில் ஆராய்வதற்கு இலங்கையை தவிர வேறு உகந்த நாடு இருக்க முடியாது.
 
சர்வதேச ஊடகங்கள் இலங்கையை கொலைப்பூமியாக காட்ட முயன்றன. ஆனால் இது அபிவிருத்தியின் பூமி. இவ்வாறான தவறான குற்றச்சாட்டுகளை சார்க் நாடுகள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் பதிலளிக்க முடியும் என்றார். மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க
மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கூறியதாவது: யுத்த காலத்தில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றின. கடந்த அரசுகளால் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட முடியாத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்திற்கு முடிவு கட்டினார். மக்கள் இராணுவத்திற்கு முழு ஆதரவு வழங்கினர்.
யுத்த முடிவின் பின் நல்லிணக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இறுதிக்கட்ட யுத்தத்தில் பெருமளவு பொதுமக்கள் பலியானதாக சில சர்வதேச ஊடகங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் குற்றஞ்சாட்டின. அதிகமான சர்வதேச ஊடகங்கள் புலிகளினால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை வெளியிடவில்லை.
புனர்வாழ்வு பெற்ற 11,546 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகமயப் படுத்தப்பட்டுள்ளனர். 3 இலட்சம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதோடு, 99 வீத மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment