Thursday, April 11, 2013

ஆஸ்திரேலியா தப்ப முயன்ற இலங்கை அகதிகள் 75 பேருக்கு ஜாமீன்!

Thursday, April 11, 2013
நாகப்பட்டினம்::தமிழக முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்ட இலங்கை அகதி களை ஜாமீனில் விடுதலை செய்து நாகை மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் தோகைமலை நல்லூர் கிராமம், வேலூர் மாவட்டம் வாலாஜா, குடியாத்தம், காஞ்சீபுரம் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கடையநல்லூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாம்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் 21 பெண்கள், 20 குழந்தைகள் உள்பட 120 பேர் கடந்த 5ந் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள கிராமத்தில் இருந்து விசைப்படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல புறப்பட்டனர்.

மறுநாள் அதிகாலையில் படகு பழுதானதால், அகதிகள் 120 பேரும் நடுக்கடலில் தத்தளிக்க நேரிட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் இந்திய கடற்படையினர் கப்பலில் சென்று கடலில் தத்தளித்த 120 பேரையும் மீட்டு, காரைக்கால் துறைமுகத்தில் சேர்த்தனர்.

அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்ல முயன்றது தெரியவந்தது. அதையடுத்து 120 பேரையும் நாகை கடலோர காவல் படை போலீசார் நாகைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.

வெளிநாட்டிற்கு செல்ல தேவையான பாஸ்போர்ட், விசா போன்ற எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லாததால் பிடிக்கப்பட்ட 120 பேரில் 75 ஆண்களை நாகை கடலோர காவல் படை போலீஸ், பாஸ்போர்ட் சட்டப்பிரிவு, அயல்நாட்டவர் சட்டப்பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அகதிகளிடம் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி விசைப்படகில் ஏற்றிச்சென்ற ஏஜெண்டுகள் உள்பட 6 அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட 75 பேரும் நாகை ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 7ந் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 10ந் தேதி வரை காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு சரஸ்வதி உத்தரவிட்டார்.

இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட 75 பேரும் நேற்று மீண்டும் நாகை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இலங்கை அகதிகள் 75 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்து மாஜிஸ்திரேட்டு சரஸ்வதி உத்தரவிட்டார்.

தமிழக முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்வதற்கு அகதிகள் பயன்படுத்திய படகை கடலோர காவல் படை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அகதிகள் தப்பிச்செல்வதற்கு பயன்படுத்திய படகு நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம்(வயது37), முருகானந்தம் (33) ஆகியோருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கடலோர காவல் படை போலீசார் கைது செய்து, நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment