Thursday, April 11, 2013

இலங்கை மீது குற்றம் சுமத்துவதற்கு முன்னர் காஷ்மீரில் 93 ஆயிரம் பேர் காணாமல் போனமை அடங்கலாக இந்திய மக்களின் மனித உரிமை மீறப்பட்ட பிரச்சினையை இந்தியா கவனிக்க வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய!

Thursday, April 11, 2013
இலங்கை::இலங்கை மீது குற்றம் சுமத்துவதற்கு முன்னர் காஷ்மீரில் 93 ஆயிரம் பேர் காணாமல் போனமை அடங்கலாக இந்திய மக்களின் மனித உரிமை மீறப்பட்ட பிரச்சினையை இந்தியா கவனிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற குழு நல்ல நோக்குடன் வருகைதந்திருந்தால் அதனை வரவேற்கலாம். ஆனால், இந்த விஜயம் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருபகுதி என்பதனை எம்மால் காணமுடிந்தது என்று உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வின் போது நந்திக்கடலில் நடந்தவை உட்பட யுத்தத்தின் இறுதிக்கட்டம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்த வேண்டுமென இந்தியா கூறியிருந்தது.

ஆனால், இந்த மக்களின் உரிமைகள் மீறப்பட்டவில்லை. அவர்கள் சுதந்திரமாகவே வாழ்ந்து வருகின்றனர். என்பதனை இங்கு வந்திருக்கின்ற இந்திய நாடாளுமன்ற குழு அறிந்துக்கொள்ளும்.

இது இலங்கையோடு நிற்கபோவதில்லை. தனது சொந்த மனித உரிமை மீறல்கள் விடயத்தில் கவனத்தில் எடுக்காத இந்தியாவுக்கு எதிராகவும் இது திரும்பும்.

ஆகவே, முதலில் உங்களுடைய பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுங்கள் என்று இந்தியாவுக்கு நாம் கூறுகின்றோம் என்றார்.

கொழும்பில் 236000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இது யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களை விடவும் அதிகமானதாகும். இது இரண்டு சமூகமும் ஒற்றுமையாக வாழ்வதனையே காட்டுகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளின் கூத்தடிப்பு காரணமாகவே இந்தியாவுடன் பிரச்சினை ஏற்பட்டது என்று இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட மேல்மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

No comments:

Post a Comment