Wednesday, April 10, 2013

இந்தியா புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது!

Wednesday, April 10, 2013
இலங்கை::இந்தியா புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
இந்திய இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக இந்தியா இந்தப் பணத்தொகையை புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்திய அமைதி காக்கும் படையினரை அனுப்பி வைப்பதன் மூலம்  புலிகளுக்கு ஏற்படக் கூடிய வரி வருமான இழப்பிற்கு, ஈடாகவே இந்தத்தொகை வழங்கப்பட்டது என அப்போதைய இலங்கைக்கான இந்திய தூதுவர் டிக்ஸித் தெரிவித்தார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த நட்டஈட்டுத் தொகை புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும்,  புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசிய இணக்கப்பாட்டுக்கு அமைய இந்தப் பணக்கொடுப்பனவு வழங்கப்படுவதாக புலிகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
 
வடக்கு கிழக்கு மாகாணசபையில் கூடுதல் ஆசனங்களை வழங்குதல், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு ஒரு பில்லியன் ரூபா பண உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த இரகசிய இணக்கப்பாட்டில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment