Thursday, April 4, 2013

ராஜீவ் கொலையாளிகள் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது: ஜனாதிபதி அலுவலகத்தில் நிலுவையில் இருந்த 7 கருணை மனுமீது பிரணாப் நடவடிக்கை!

Thursday, April 04, 2013
புதுடெல்லி::ஜனாதிபதி அலுவலகத்தில் நிலுவையில் இருந்த 7 கருணை மனுக்கள் மீது குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் 5 பேருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தூக்கிலிருந்து தப்பிக்க ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி வருகிறார்கள். உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைஅடிப்படையில் இந்த கருணை மனுக்கள் சில சமயம் ஏற்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும். பெரும்பாலான சமயங்களில் நிராகரிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படும்.

இந்த மனுக்களை பரிசீலனை செய்ய காலக்கெடு எதையும் இந்திய அரசியல் சட்டம் நிர்ணயிக்கவில்லை. இதனால் பலரின் கருணை மனுக்கள் பல ஆண்டுகளாக ஜனாதிபதி அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்ட வரலாறு உள்ளது.
ராஜீவ் கொலையாளிகள் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவர்களது கருணை மனுக்களை கடந்த ஆண்டு அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரதிபா பாட்டீல் நிராகரித்தார். இதை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ள நிலையில், ‘மேலும் ஒரு தண்டனையாக தூக்கில் போடுவது தவறு’ என ராஜீவ் கொலையாளிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டுள்ளது. கருணை மனுக்களை நீண்ட நாள் கிடப்பில் போட்டது தவறு என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரதிபா பாட்டில் தனது பதவிக் காலத்தின் கடைசி கட்டத்தில் சுமார் 35 கருணை மனுக்களை பரிசீலனை செய்து ஆயுளாக குறைத்தார். இருப்பினும் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் கருணை மனுவை அவர் நிலுவையில் விட்டு சென்றார். இதன் பின்னர் ஜனாதிபதி பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜி மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கருணை மனுவை கடந்த நவம்பர் 5ம் தேதி தள்ளுபடி செய்தார்.

இதை தொடர்ந்து அப்சல் குருவின் மனுவை பிப்ரவரி 3ம் தேதி நிராகரித்தார்.

இதன்பின்னர் அவரிடம் 7 கருணை மனுக்கள் நிலுவையில் இருந்தன. தற்போது இந்த 7 மனுக்களையும் அவர் பரிசீலனை செய்து 5 கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார். 2 பேரின் கருணை மனுக்களை ஏற்றுக் கொண்டு அவர்களது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார். இதை தொடர்ந்து ஜனாதிபதி அலுவலகத்தில் நிலுவையில் இருந்த அனைத்து கருணை மனுக்களும் பைசல் செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு வாரத்தில் தூக்கு

அரியானா மாநிலத்தை சேர்ந்த தரம்பால், உ.பி.யை சேர்ந்த குர்மித் சிங், ஜாபர் அலி, சுரேஷ் மற்றும் ராம்ஜி, அரியானா மாநிலத்தை சேர்ந்த சோனியா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ், உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த சுந்தர் சிங், கர்நாடகாவை சேர்ந்த பிரவீன்குமார் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பரிசீலனை செய்தார்.  இதில் தரம்பால் பலாத்கார குற்றத்துக்காக முதலில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர். பரோலில் வெளியே வந்து பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொடூரமாக வெட்டிக் கொன்றான். இந்த வழக்கில் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 14 ஆண்டுகள் நிலுவையில் இருந்த இவனது கருணை மனு, தற்போது தள்ளுபடி செய்யப்
பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேரை கொன்றதற்காக கடந்த 86ம் ஆண்டு உ.பி.யை சேர்ந்த குர்மித் சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சுரேஷ் மற்றும் ராம்ஜி தங்களது சகோதரர் குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.
சோனியாவும் அவரது கணவர் சஞ்சீவும் சேர்ந்து சோனியாவின் பெற்றோர் உள்பட 8 பேரை விஷம் வைத்து கொன்ற குற்றத்துக்காக மரண தண்டனை பெற்றவர்கள். சுந்தர் சிங் பலாத்காரம் மற்றும் கொலை குற்றத்துக்காக தூக்கு தண்டனை பெற்றவர். ஜாபர் அலி தனது மனைவி மற்றும் 5 பெண் குழந்தைகளை கொன்றவர். பிரவீன் குமார் தனது குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொன்றதற்காக கடந்த 94ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவர்களில் யாருடைய கருணை மனு ஏற்கப்பட்டது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

கருணை மனு நிராகரிக்கப்பட்டவர்களின் தூக்கு தண்டனை இன்னும் ஒரு வாரத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment