Saturday, March 02, 2013
இலங்கை::நாட்டின் ஏனைய எட்டு மாகாணங்களுக்கும் தற்போதுள்ள அதிகாரங்களுக்கு அமைய வடமாகாணத்திற்கும் உரிய அதிகாரம் கிடைக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
தான் உறுதியளித்தவாறு வடமாகாண சபை தேர்தலை நடாத்துவதாக இந்தியாவின் த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் அனுசரணையுடன் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன் யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நபருக்கும் அதனை நேரடியாக சென்று பார்வையிட முடியும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி மூன்று வருடங்களில் இவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்த யாரால் முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய நாடுளின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பில் தான் இந்தியாவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவில்லை என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
அயல் நாடு என்ற வகையிலும் நட்பு நாடு என்ற வகையிலும் இந்தியா தமது பொறுப்பு யாதென அறிய வேண்டுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதனை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியதில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment