Wednesday, December 4, 2013

பலமிக்க நாடுகளுக்கு அடிபணியாது துணிவுடன் செயற்படுவதன் காரணமாகவே எமது ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்புகள் தலைதூக்குகின்றன: வாசுதேவ நாணயக்கார!

Wednesday, December 04, 2013
இலங்கை::பலமிக்க நாடுகளுக்கு அடிபணியாது துணிவுடன் செயற்படுவதன் காரணமாகவே எமது ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்புகள் தலைதூக்குகின்றன.
 
ஏகாதிபத்திய நாடுகளால் சர்வதேசத்தின் முன்னிலையில் எம்மை மண்டியிட வைக்கவே முடியாது. அவற்றின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். ஏனெனில் அவற்றுக்கு எதிரான சக்திகளுடன் கை கோர்த்தே நாம் பயணிக்கிறோம் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
 
நாடாளுமன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஜனாதிபதி செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
பலமிக்க நாடுகளுக்கு அடிபணியாது துணிவுடன் செயற்படுவதன் காரணமாகவே எமது ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்புகள் தலைதூக்குகின்றன. இவற்றை எம்மால் தோல்வியடையச் செய்ய முடியும். ஏனெனில் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான சக்திகளுடனேயே நாம் கைகோர்த்துப் பயணிக்கிறோம்.
 
வடமாகாண சபையுடன் இணைந்து செயற்பட அரசு தயாராகவுள்ளது. அதேபோல வடமாகாணமும் எம்முடன் இணைந்து செற்படவேண்டும்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் ஆற்றிய உரைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டது. அது தவறானதாகும். அவரது கருத்துடன் நாம் இணங்கவில்லை. இருப்பினும் கருத்து வெளியிடுவதற்காக அவருக்கு இருக்கின்ற உரிமையை நாம் மதிக்கிறோம்.
 
அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எமக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருக்கிறது. அவர்களின் கருத்தை நாம் ஏற்கவில்லை. ஆனால் கருத்து வெளியிடும் அவர்களது உரிமையை நாம் மதிக்கிறோம்.
 
இதுபோன்ற உரிமைகளை மற்றவர்களுக்கும் வழங்கி நாம் ஜனநாயகத்தை மதித்துச் செயற்படுகிறோம். அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்றோம்.
எனவே, இதனைக் கருத்திற்கொண்டு எமது உள்விவகாரத்தில் சர்வதேசம் தலையிட நாம் அனுமதிக்கக் கூடாது. அதற்கான ஒற்றுமையை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
 
1988, 89 ஆண்டுகளிலிருந்து காணாமல்போனோர்களை நினைவுகூரும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் நினைவுத்தூபி ஒன்றை அமைத்துள்ளோம். ஆரம்ப காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய அவற்றை நினைவுகூர்ந்து நாம் நினைவுச் சின்னத்தையும் நிறுவியுள்ளோம்.
 
நாட்டில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு இதுவும் ஒரு சான்றாகும்.
 
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் ஒரு சர்வதேச குருடராக இருக்கின்றார் . காணாவேண்டியவற்றைக் காணாமலும், கேட்கவேண்டியவற்றைக் கேட்காமலும் அவர் இருக்கின்றார் என்றார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.

No comments:

Post a Comment