Wednesday, December 04, 2013
இலங்கை::அரசியல் ரீதியில் எந்த கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அனைவரும் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்தார். நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்ததை போன்று நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வரவு - செலவு திட்டத்தில் சட்டமும் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிடுகையில் :
உலகின் சகல நாடுகளும் தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்குகிறது. அந்த அடிப்படையிலேயே பாதுகாப்பு அமைச்சுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் தோட்டம் என்ற ஒன்றை இல்லாமல் ஆக்கி அதற்கு பதிலாக சகல வசதிகளையும் கொண்ட மாடி வீடுகளை பெற்றுக்கொடுப்பதே நகர அபிவிருத்தி அமைச்சின் நோக்கமாகும்.
இன்று தோட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்த செயற்பாடுகள் மூலம் கொழும்பு உட்பட நாட்டின் பல நகரங்களும் பாரிய அளவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
சில அரசியல் வாதிகளுக்கு தமது ஆட்சி காலத்தில் இது போன்ற பாரிய அபிவிருத்தி பணிகளை செய்ய முடியவில்லை என்பதனால் ஏற்பட்ட கவலையினாலேயே எமது திட்டங்களை எதிர்க்கின்றனர். யுத்தத்திற்கு பின்னர் காணப்பட்ட சகல சவால்களையும் அரசாங்கம் வெற்றி கொண்டுள்ளது. கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் தமது சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்னர். வட பகுதி மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. சரணடைந்தவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment