Tuesday, April 23, 2013

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவும், கலைஞர் கருணாநிதியும் இப்போது தேர்தலை மையமாக வைத்து இலங்கைக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கிறார்கள்: அவர்களின் அரசியல் நாடகத்தை பற்றி நாம் அலட்டிக்கொள்ளவில்லை: மஹிந்த ராஜபக்ச !

Tuesday, April 23, 2013
இலங்கை::தமிழ் நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவும், கலைஞர் கருணாநிதியும் இப்போது தேர்தலை மையமாக வைத்து இலங்கைக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கிறார்கள். நாம் அவற்றைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. இதனால் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு இடையிலான நல்லுறவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
 
நேற்று நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே  ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
 
சிலர் எமது அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் அரசை கவிழ்த்துவிட முடியும் என்று கனவு காண்கின்றனர். ஒரு அரசாங்கத்தை கவிழ்க்கும் சக்தி எங்கள் கையில் மாத்திரமே இருக்கிறது என்பதை முன்னர் ஒரு தடவை வீதி ஆர்ப்பாட்டங்கள், பாதயாத்திரிகைகள், சப்த கோஷம் ஆகிய எதிர்ப்புகளின் மூலம் நாம் நிரூபித்தோம்.
 
எங்கள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு வெளிநாட்டு உதவியைப் பெற்றாலும் அது பயனளிக்கப் போவதில்லை. அத்தகைய சாதனைகளை எனக்கும் எனது கட்சிக்கும் மாத்திரமே செய்ய முடியும்.
 
அதனால்தான், இன்றும் கூட எனது அரசாங்கம் வலுவான அடித்தளத்துடன் ஆட்சி செய்து வருகிறது என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
 
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறது என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சில சந்தர்ப்பங்களில் வன்முறைகளை யார் புரிந்தார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்வதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடைப்பதில்லை.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாதாள உலகக் கோஷ்டிகளும், அரசாங்கத்தை எதிர்க்கும் தீய சக்திகளும் வன்முறைக்கு தூபமிட்டு அந்தப் பொறுப்பை அரசாங்கத்தின் மீது சுமத்துவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே சகல முறைப்பாடுகளையும் நாம் விசாரணை செய்து தவறு செய்தவர்களை தண்டிப்போம் என்று கூறினார்.
 
இப்போது அரச சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள்.
 
ஆதாரமற்ற அந்த குற்றச்சாட்டுகளை நாம் பொருட்படுத்தப் போவதில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளில் ஏதாவது உண்மை இருந்தால் நிச்சயம் நான் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
 
உதயன் பத்திரிகை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி,அதுபற்றி நாம் விசாரணை நடத்துகிறோம். விசாரணை முடிந்தவுடன் உங்களுக்கு அறிவிப்பேன் என்றார். இது குறித்து உங்களிடம் ஏதாவது தகவல் இருந்தால் எனக்கு அறியப்படுத்துங்கள். அவைகுறித்தும் நான் விசாரணை செய்வேன் என்று கூறினார்.
 
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் உதயன் பத்திரிகை தாக்குதல் ஒரு உள்விவகாரச் சதி என்று கூறியிருக்கிறார் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்டார்.
 
அதுபற்றி எனக்குத் தெரியாது. அது உள்விவகாரமாக இருந்தாலும் நாம் அதுகுறித்தும் விசாரணை செய்ய தயாராக இருக்கிறோம் என்று ஜனாதிபதி கூறினார்.

No comments:

Post a Comment