Tuesday, April 23, 2013

இந்திய அரசுடனான நட்புறவு நல்லமுறையில் உள்ளதாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்!

Tuesday, April 23, 2013
இலங்கை::இந்திய அரசுடனான நட்புறவு நல்லமுறையில் உள்ளதாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

இலங்கையில், 2009ல் நடந்த இறுதி கட்ட சண்டையின் போது போர் குற்றம் நடந்ததாகவும், சரணடைந்த ஏராளமான  புலிகள் சுட்டு கொல்லப்பட்டதாகவும், தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள், இலங்கை அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகத்துக்கு சுற்றுலா வரும் இலங்கை பயணிகள் மீது, சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதால், இலங்கை தூதரகத்தை, கேரளாவுக்கு மாற்றலாமா, என அந்நாட்டு அரசு யோசித்து வருவதாக கூறப்பட்டது.

இதற்கிடையே, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, நிருபர்களிடம் கூறியதாவது:
 
தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள், இலங்கை மீது அதிருப்தி கொண்டிருந்தாலும், இந்தியாவுடனான ஒட்டு மொத்த உறவு சுமுகமாகவே உள்ளது. தமிழகத்தை சேர்ந்த கட்சி தலைவர்கள் இலங்கையில் சுற்று பயணம் செய்த போது, இங்கு மேற்கொள்ளப்படும் மறுவாழ்வு பணிகள் குறித்து திருப்தி தெரிவித்தனர்.இலங்கையின் வடக்கு மாகாணத்தில், தேர்தல் நடத்தும் சூழல் உள்ளது. எனினும் அங்கு தேர்தல் நடத்துவதற்குரிய சூழல் மேம்படுத்தப்படும்.இவ்வாறு ராஜபக்ஷே கூறினார்.

எரிசக்தித் துறை அமைச்சர் பவித்ரா குறிப்பிடுகையில்,
 
கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசுடன் அமைக்கப்பட உள்ள சம்பூர் அனல் மின் நிலைய கட்டுமான பணிகள், ஜூலை மாதம் துவங்கும். இதன் மூலம் இலங்கை மின் தொகுப்புக்கு, 2016ல், கூடுதலாக 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்,'' என்றார்.

மட்டகளப்பில் நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில், மறுவாழ்வுத் துறை அமைச்சர் சந்திரசிரி கஜதீரா கூறியதாவது:
 
மாஜி  புலிகள், 180 பேரிடம் நல்ல விளையாட்டு திறமை இருப்பதை கண்டறிந்துள்ளோம். கராத்தே, கால்பந்து, நீச்சல், துப்பாக்கி சுடுதல் போன்ற திறமைகள் இவர்களிடம் உள்ளதால், ஆசிய விளையாட்டு போட்டிக்கு இவர்களை தேர்வு செய்ய உள்ளோம்.துப்பாக்கி சுடும் போட்டியில் தேர்ச்சி பெற்ற,நான்கு பேர் உள்பட, 18 பேரை, கொழும்பில் உள்ள விளையாட்டு விடுதிக்கு அனுப்ப உள்ளோம். இவர்கள் ஆசிய விளையாட்டுக்காக பயிற்றுவிக்கப்படுவர்.இவ்வாறு கஜதீரா கூறினார்.

No comments:

Post a Comment