Monday, April 8, 2013

இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியை யாரும் தனிமைப்படுத்த முடியாது: ப.சிதம்பரம் பேச்சு!

Monday, April 08, 2013
சென்னை::மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை ஏற்பாட்டில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சிந்தாதிரிப்பேட்டையில் நடந்தது. இதில் ப.சிதம் பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் இருந்து இலங்கை தமிழர்கள் பக்கம் காங்கிரஸ் உறுதியாக நின்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. 1983-ல் இருந்து இலங்கை தமிழர்களுக்கு துணையாக நின்றுள்ளோம். ராஜீவ் காந்தியை இந்த மண்ணில் தான் இழந்தோம். அந்த இழப்புக்கு யார் காரணம் என்பதை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது.

காங்கிரசை பொறுத்த வரை இலங்கை தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து, சம உரிமை, அந்நாட்டின் அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதில் இருந்து எந்த நேரத்திலும் காங்கிரஸ் பின் வாங்கியது இல்லை. இலங்கையில் வடக்கு மாநிலம், கிழக்கு மாநிலம் என 2 மாநிலமாகவோ அல்லது ஒரே மாநிலமாகவோ அமைக்கப்பட்டு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை ஆரம்ப காலம் தொட்டே வலியுறுத்தி வருகிறோம்.

2002-ல் அ.தி.மு.க. எடுத்திருந்த நிலைப்பாட்டில் இருந்து இப்போது மாறியுள்ளது. காலத்திற் கேற்ப அரசியல் கட்சி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம். தவறு இல்லை. ஆனால் ஆரம்பத்தில் இருந்து எங்கள் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

இலங்கையில் இறுதிகட்டப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன என்பதை காங்கிரஸ் மறுக்க வில்லை. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரித்தது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் எவ்வாறு ஆதரித்தனவோ அவ்வாறு தான் காங்கிரசும் ஆதரித்தது. அப்படியிருக்கும் போது காங்கிரஸ் மீது மட்டும் பழிபோடுவது ஏன்? காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பழி போடப்படுகிறது.

காங்கிரசை தனிமைப்படுத்த 123 ஆண்டுகளாக முயற்சிக்கும் எல்லா கட்சிகளுமே தோற்று போய் விட்டன. 46 ஆண்டுகளாக ஆளும் திராவிடக் கட்சிகளை நாங்கள் மதிப்பது போல் காங்கிரஸ் கட்சியையும் அவர்கள் மதிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக இந்த முறையும் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. கருணாநிதி வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டுவர முயற்சித்தோம்.

நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கருணாநிதி கூறினார். அது தொடர்பாக நானே வரைவு தீர்மானம் எழுதி கொண்டிருந்தேன். அதற்குள் அமைச்சரவையில் இருந்து வெளியேறியதுடன் கூட்டணியில் இருந்தும் தி.மு.க. வெளியேறியது. நாடாளு மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றுவதற்கு ஆதரவு தந்த ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஆதரித்தன. இந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தை சேர்ந்தவை. நாடாளுமன்றத்தில் காங்கிரசை தவிர வேறு எந்த கட்சிகளும் ஆதரிக்கவில்லை.

பா.ஜ.க.வை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்தார். பா.ஜ.க. தமிழர்களுக்கு ஆதரவான கட்சி இல்லை. இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டும் தனிக்கட்சி கூட்டணி பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தால் அதனை வரவேற்கிறோம். கூட்டணி ஆட்சி என்றாலும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. அல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், சேவாதன காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், ஜவகர், செ.நிலவன், வி.கோ. ஆதவன், கிஷோர் குமார், சவுந்தர், சாமி வேல், உமாவாசவி, சுப்பிரமணியம், மெய்ஞான மூர்த்தி, குபேந்திரன், சாரதி, மகாராஜன், வாகை செல்வன், திருமாறன், பட்டுக்கோட்டை ராஜேந்திரன், தென்னக ரெயில்வே ஆலோசனை உறுப்பினர் ஆரி ஜாண்சன், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் மூலக்கட்டை வெண்மணி அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
tamil matrimony_INNER_468x60.gif
 

No comments:

Post a Comment