Friday, April 5, 2013

மட்டக்களப்பு மாவட்டத்தை இன்று பெண்களே ஆட்சி செய்கின்றனர்: மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன்!

Friday, April 05, 2013
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தை இன்று பெண்களே ஆட்சி செய்கின்றனர் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
 
5000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நாவற்குடா தருமரட்ணம் வித்தியாலயத்தின் அபிவிருத்தி பணிகளை(5.4.2013) இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் முரளிதரன் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களே ஆட்சி செய்கின்றனர்.
 
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஒரு பெண்தான் கடமையாற்றுகின்றார். அதே போன்று மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் மற்றும் பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளராகவும் பெண்களே கடமையாற்றுகின்றனர்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர், வாகரை பிரதேச செயலாளர், போன்ற மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் பெண்கள் பிரதேச செயலாளாகளாக கடமையாற்றுகின்றனர்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல உயர் நிலை பதவிகளில் இன்று பெண்களுள்ளனர். இது நமது மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண்களின் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றத்தை காட்டுகின்றது.
இன்று க.பொ.த.சாதரண தரப்பரீட்சையில் கிராமப்பற பாடசாலை மாணவர்களும் மற்றும் பின் தங்கிய பாடசாலை மாணவர்களும் சிறந்த பெறுபேற்றை பெறும் நிலை உருவாகியுள்ளது.
 
இந்த அரசாங்கம் இன்று கல்விக்கான அபிவிருத்தியையும் அதிகமாக மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 70 பாடசாலைகள் 5000 பாடசாலைகள் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இதற்கு நான்கு கொடி ரூபா செலவு செய்யப்படுகின்றது.
அதே போன்று ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 26 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு ஒவ்வொரு பாடசாலைக்கும் 6கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைவிடவும் மஹிந்தய திட்டத்தின் கீழ் பல பாடசாலைகளில் இன்று ஆய்வு கூடங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
 
இந்த வகையில் அரசாங்கம் கல்விக்காக பல் வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது. ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் நகர் புற பாடசாலைகளில் மேற் கொள்ளப்படும் அதே அபிவிருத்தியும் பயனும் நமது பின்தங்கிய பாடாலைகளும் பெறவேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த பாரிய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரணிதரன் இங்கு மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment