Wednesday, April 24, 2013

இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் பேச்சு தோல்வி: படைகளை திரும்ப பெற சீனா மறுப்பு!!

Wednesday, April 24, 2013
புதுடெல்லி::இந்திய பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியது தொடர்பாக, இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ஊடுருவிய படைகளை திரும்ப பெற சீனா மறுத்து விட்டது. காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்தில் தவுலத் பெக் ஆல்டி பகுதியில் கடந்த 15-ந் தேதி சீன ராணுவம் ஊடுருவியது. இந்திய பகுதிக்குள் 10 கி.மீ. தூரம் வரை வந்து விட்ட சீன படைகள், அங்கு கூடாரம் அமைத்து முகாமிட்டன.
 
மேலும், சீன ஹெலிகாப்டர்களும் அங்கு பறந்து சென்றன. இதுபற்றி அறிந்தவுடன், இந்தியா தனது படைகளை அங்கு அனுப்பி வைத்தது. இதனால் பதற்றம் எழுந்தது. டெல்லியில், இந்தியாவுக்கான சீன தூதர் வெய் வெய்யை இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மத்தாய் நேரில் அழைத்து, இந்தியாவின் கவலைகளை தெரிவித்தார்.
 
இப்பிரச்சினையை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், மத்திய வெளியுறவு அமைச்சக இணை செயலாளர், சீன வெளியுறவு அமைச்சக இணை செயலாளரை தொடர்பு கொண்டு முறையிட்டார்.
 
இந்தியாவின் நலன்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கூறினார். இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக, இந்திய-சீன ராணுவங்களின் பிரிகேடியர் அந்தஸ்திலான அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுசுல் செக்டாரில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
இந்திய தரப்புக்கு பிரிகேடியர் பி.எம்.குப்தாவும், சீன தரப்புக்கு சீனியர் கர்னல் அயன் யாந்தியும் தலைமை தாங்கினர். இந்த பேச்சுவார்த்தையின்போது, எல்லை கோடு பற்றிய உண்மை நிலவரங்கள், இருதரப்பிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பேச்சுவார்த்தையின்போது, ஊடுருவிய இடத்தில் இருந்து சீன படைகளை திரும்ப பெறுமாறும், ஊடுருவலுக்கு முந்தைய நிலையை கடைபிடிக்குமாறும் இந்தியா வற்புறுத்தியது.
 
ஆனால், அதை ஏற்க சீனா மறுத்து விட்டது. அந்த பகுதி, தங்களுக்கு சொந்தமானது என்றும், எனவே, ஊடுருவல் நடக்கவில்லை என்றும், திரும்பி செல்ல முடியாது என்றும் சீனா கூறியது. மேலும், புக்ட்சே என்ற இடத்தில், பதுங்கு அரண்களை இந்தியா கட்டியதற்கு சீனா ஆட்சேபணை தெரிவித்தது. அந்த அரண்களை இடித்து விடுமாறு கூறியது.
 
 இந்த பேச்சுவார்த்தையில், சீனாவிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. இதனால், 3 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்தது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்தது. இப்பிரச்சினையில், முட்டுக்கட்டை நீடிக்கும் நிலையில், ஊடுருவல் நடந்த பகுதிக்கு இந்தியா கூடுதலாக படைகளை அனுப்பி வைக்கும் என்று இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இதனால் பதற்றம் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதற்கிடையே, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதீன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
 
இந்த பிரச்சினை, எல்லை கோடு தொடர்பான மாறுபட்ட புரிந்து கொள்ளல்களால் எழுந்துள்ளது. இருதரப்பு படைகள் இடையிலான நேருக்கு நேர் சூழ்நிலையாக இதை நாங்கள் பார்க்கிறோம். இருப்பினும், எல்லையில் அமைதி நிலவுகிறது. தற்போது, இருநாட்டு ராணுவ அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
 
அதில், அமைதி தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம். இரு நாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில், கடந்த காலங்களில் கூட இத்தகைய பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்துள்ளோம். ஏப்ரல் 15-ந் தேதிக்கு முந்தைய நிலையை (படைகளை திரும்ப பெறுதல்) கடைபிடிக்குமாறு சீனாவிடம் வற்புறுத்தி உள்ளோம்.
 
இவ்வாறு அவர் கூறினார். 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment