Wednesday, June, 06, 2012இலங்கை::தமிழக அரசியல் தலைவர்கள் புலம்பெயர் தமிழர்களை பிழையாக வழிநடத்தி வருவதாக புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோபாலசுவாமி உள்ளிட்ட சிலர் இவ்வாறு புலம்பெயர் தமிழர்களை பிழையாக வழிநடத்தக் கூடிய கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கருணாநிதி டெசோ என்னும் ஓர் அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும் இதன் மூலம் அவரது அரசியல் வங்குரோத்து நிலைமை வெளிப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழ் மக்கள் மீது மெய்யான கரிசனை இருந்தால், பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலேயே கருணாநிதி கவனம் செலுத்தியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர் இருக்கும் வரையில் தமிழீழத்திற்காக போராட்டம் நடத்துவதாக கருணாநிதி அண்மையில் சூளுரைத்துள்ளதாகவும், இவ்வாறான கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ போராட்டத்தினால் இலங்கைத் தமிழ் மக்கள் சொல்லொனா துயரங்களை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தனிநாட்டுக் கோரிக்கை எந்த வகையிலும் தீர்வாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்திசாதூரியமான எவரும் தமிழீழ கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான இலங்கையில் புலம்பெயர் தமிழ் மக்கள் உதவிகளை வழங்குவதனை தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment