Saturday, December 31, 2011

ஆந்திர எல்லையில் மீன் பிடிக்க சென்றபோது புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் மீட்பு!

Saturday,December,31,2011
கும்மிடிப்பூண்டி::கும்மிடிப்பூண்டி அருகே மீனவ கிராமத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று காணாமல்போன 122 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம், பாட்டைக்குப்பம், நொச்சிக்குப்பம், பெத்தானியாகுப்பம், வெங்கடேசபெருமாள் நகர் மற்றும் அந்த பகுதிகளை சேர்ந்த 122 மீனவர்கள், 15 படகுகளில் கடந்த 5 நாளுக்கு முன் மீன் பிடிக்க சென்றனர். ஆந்திர மாநில கடல் எல்லையில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் மீன் பிடிக்க முடியாமல் மீனவர்கள் திணறினர். புயல் காற்றில் சிக்கிய படகு திசை மாறி தத்தளித்தது. கடும் போராட்டத்துக்கு பிறகு, ராக்கெட் ஏவுதளம் இருக்கும் இடமான ஸ்ரீஹரிகோட்டாவை நோக்கி படகை திருப்பி, அங்கு மீனவர்கள் தஞ்சம் அடைந்தனர். சந்தேகத்தின்பேரில் அங்கிருந்த அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தங்களது விவரங்களை தெரிவித்து, ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் செல்போன் நம்பரை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் ஆறுமுகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வட்டாட்சியர் ராமபிரான், ஒன்றியக்குழு தலைவர் குணம்மா, டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் வேணுகோபால் மற்றும் மீனவர்களின் உறவினர்கள் ஆகியோர் அங்கு சென்றனர். கூடூர் ஆர்டிஓ வீரபாண்டியன் மற்றும் இஸ்ரோ அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்களை மீட்டனர். பின், 122 மீனவர்களையும் வேனில் ஏற்றி, சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். அவர்களை உறவினர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

No comments:

Post a Comment