Saturday, August 31, 2013

வடக்கு முஸ்லிம்களை படுகுழியில் தள்ளிவிட முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்கிறது: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்!

Saturday, August 31, 2013
இலங்கை::அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக சில பௌத்த பேரீனவாதிகள் பாசிச செயற்பாடுகளை முடக்கி விட்டுள்ளனர். இதனால் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மதப் பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பம்  வடக்கு முஸ்லிம்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
 
கற்பிட்டி அல்மனார் முகாமில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
இவர் மேலும் உரையாற்றிய போது; வடக்கு முஸ்லிம்கள் 20 வருடங்களாக இன்னல்களையே சுமந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்குவதிலும் அவர்களை மீள் குடியேற்றுவதிலும்   பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
 
எனினும் இத்தடைகளை உடைத்து வடக்கு முஸ்லிம்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனையும், அவரது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினைரையும் இனவாதிகள் என்று தமிழ்த் தேசியவாதிகள் தூசிக்கின்றனர்.
 
இது போதாது என்று தற்போது நமது முஸ்லிம் காங்கிரசும் தமிழ்த் தேசிய வாதிகளுடன் இணைந்து எதிராக பிரச்சாரம் செய்வது வடக்கு முஸ்லிம்களின் எதிர்காலத்தையே பாதிப்பதாக உள்ளது. வரலாற்றிலிருந்தும் கடந்தகால அனுபங்களிலுந்தும் நாம் பாடங்களை கற்கவேண்டியிருக்கின்றன. வுரலாற்றிலிருந்து பாடம் கற்கா விட்டால் நாம் அரசியல் அநாதைகளாக மாறிவிடுவோம்.
 
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதனால் வடக்கு முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட  பாதிப்பு என்ன வென்று முஸ்லிம் காங்கிரஸ் அறிந்திருந்தும் அறியாதவர்களாக செயற்படுகின்றனர். தமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் குறுடாக வேண்டும் என்றுதான் இன்று தனியாக போட்டியிடுகின்றனர்.
 
தனித்து போட்டியிடுவதனால் ஏற்பட்ட பாதிப்பை நான் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
மாந்தை பிதேச சபையில் த.தே.கூட்டமைப்பு- 3800 வாக்குகள், அ.இ.ம.காங்கிரஸ்- 3500 வாக்குகள், மு.காங்கிரஸ்- 1500  வாக்குகளை பெற்றனர்.
 
இங்கு த.தே.கூட்டமைப்பை விட 300 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இப் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பறி கொடுத்தோம்.
அதுபோலதான் நாச்சிக்குடா பிரதேச சபையை
த.தே.கூட்டமைப்பு -3996 வாக்குகள்
அ.இ.ம.காங்கிரஸ்  - 3870 வாக்குகள்
மு.காங்கிரஸ்       -153  வாக்குகளை பெற்றனர்.
இங்கு த.தே.கூட்டமைப்பை விட 126 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இப்பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பறி கொடுத்தோம். இவ்வாறு தான் மன்னார் பிரதேச சபையை 400 வாக்குகளால் பறிகொடுத்தோம்.
இப்பிரதேச சபைகளை முஸ்லிம் காங்கிரசும் கைப்பற்றவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் கைப்பற்ற விடவில்லை.
 
இன்று இப்பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் நிலை என்ன வென்று இவர்களுக்கு தெரியாது. ஒரு பௌசர் தண்ணீரைப் பெறுவதற்கு கூட இப்பிரதேச சபைகளிடம் பிச்சைக்காரர்கள் போல் அலைய வேண்டியுள்ளது. இது தான் வடக்கு முஸ்லிம்களின் யதார்த்த நிலை.
 
இந்த மக்களின் துன்பங்கள் தெரிந்திருந்தும் அவற்றை நிறைவேற்றுவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்யாமல் மீண்டும் மீண்டும் வடக்கு முஸ்லிம்களை படுகுழியில் தள்ளிவிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியவாதிகளுடன் கைகோர்த்துள்ளது.
வடக்கிற்கு வெளியில் உள்ள முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருக்கும் எங்களைப் பார்த்து நாட்டில் பள்ளிகள் உடைக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் நசுக்கப்படுகின்றனர் இந்த முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்கின்றனர்.நாங்கள் அரசாங்கத்துடன் சுகபோகங்களுக்காக ஒட்டிக் கொண்டிருப்பதாக இம்மக்கள் கூறுகின்றனர்.
 
ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் வடக்கிலிருந்து துரத்தப்பட்ட இம்முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தற்போதுதான் அமைச்சர் றிசாதினால் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஆத்திரத்துடன் எடுக்கும் முடிவுகள் நாட்டில் உள்ள முழு முஸ்லிம்களையும் பாதிக்கும்.
 
குறிப்பாக வடக்கு முஸ்லிம்களை மீண்டும் அகதி வாழ்க்கைக்கு இட்டுச் சென்றுவிடும். இவ்வாறான பிரச்சினைகளைக் கொண்டுள்ள நாம் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் எம்மால் பெறப்படும் முடிவுகள் இப்பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.பௌத்த பேரீனவாதத்தின் செயற்பாடுகளை ஒடுக்க வேண்டும்.
 
வடக்கு முஸ்லிம்களின் தேர்தல் ஆணையைக் கொண்டு நாங்கள் உரியவரிடம் பேசுவோம்.  பௌத்த பேரீனவாதிகளின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு மத்தியில் நம்பிக்கையுடன் முஸ்லிம்கள் அராங்கத்திற்கு வாக்களித்துள்ளனர் என்பதையும் முஸ்லிம்களின் நம்பிக்கையை காப்பாற்றுமாறும் நாங்கள் உரயவர்களிடம் கோருவோம்.
 
அப்போதும் பௌத்த பேரீனச் செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லையாயின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆக்கபூர்வமான நடவடிக்கையை  இச்சமுகத்திற்காக எடுக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான எம்.எல்.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment