Friday, March 30, 2012

அமைச்சர், எம்.பி. கோஷ்டி மோதல் திருப்பூரில் ஜெ. பேனர் கிழிப்பு!

Friday, March,30, 2012
திருப்பூர்::திருப்பூரில் அமைச்சர் ஆனந்தன், எம்.பி. சிவசாமி ஆதரவாளர்களுக்கிடையேயான கோஷ்டி பூசலில், ஜெயலலிதா படத்துடனான பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் அதிமுகவில் அமைச்சர் ஆனந்தன் மற்றும் எம்.பி. சிவசாமி ஆகியோரது ஆதரவாளர்கள் 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். சிவசாமியின் ஆதரவாளர்கள் சிலர், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வெற்றியையொட்டி முதல்வர் ஜெயலலிதா படத்துடன் மெகா பேனர்களை, புஷ்பா ஜங்ஷன் மற்றும் காங்கயம் ரோடு, சி.டி.சி. கார்னர் பகுதியில் வைத்திருந்தனர். சிவசாமி, மேயர் விசாலாட்சி உள்ளிட்டோரின் படங்களுடனான இந்த பேனர்களில், மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆனந்தன், துணை மேயர் குணசேகரன் ஆகியோரது படங்கள் இடம்பெறவில்லை.இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென மெகா பேனர்கள் கிழித்து அகற்றப்பட்டுள்ளன.

தகவல் அறிந்த எம்.பி. ஆதரவாளர்கள் நேற்று இரவு அங்கு கூடினர். பேனர் கிழிப்புக்கு எதிராக திடீர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு மற்றும் தெற்கு காவல்நிலையங்களில் புகார் தெரிவித்தனர். அதிமுக நிர்வாகிகள் சிலரது பெயரை குறிப்பிட்டு, அவர்கள் தான் தங்கள் பேனரை கிழித்து அகற்றியதாக தெரிவித்தனர். அதிமுகவினரிடையே முற்றியுள்ள கோஷ்டி பூசல் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு மகளிர் அணி நிர்வாகியும், கவுன்சிலருமான கீதா, மாநகர சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்பி இப்ராஹிம் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்தார். இதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, மர்ம நபர்கள் தன்னை தாக்கியதாக கூறி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தம்பி இப்ராஹிம், கட்சியினர்தான் தன்னை தாக்கியிருக்க கூடும் என்று போலீசில் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment