Wednesday, November 30, 2011

டெல்லி திகார் ஜெயிலில் பெண் கைதிகளுக்கு டி.வி. பரிசு கொடுத்த கனிமொழி; இனிப்பு வழங்கி விடை பெற்றார்!

Wednesday, November 30, 2011
புதுடெல்லி :194 நாட்கள் ஜெயிலில் இருந்த கனிமொழி இப்போது தான் அப்பாடா...'' என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். சுமார் 6 மாதத்துக்குப்பிறகு நேற்றிரவுதான் அவர் நிம்மதியாகத் தூங்கினார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக கடந்த மே மாதம் 20-ந்தேதி அவர் கைது செய்யப்பட்ட போது தி.மு.க.வினர் மிகவும் வேதனைப்பட்டனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான உண்மை நிலவரங்களை அறிந்தவர்கள் அவர் மீது இரக்கப்பட்டனர். உறவினர்கள் மனம் துடிதுடிக்க, கண்ணீர் மல்க திகார் ஜெயிலுக்குள் சென்ற கனிமொழியின் ஜாமீன் மனுக்கள் சி.பி.ஐ. கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என அடுத்தடுத்து நிராகரிக்கப்பட அவர் மனம் உடைந்து போனார்.

பள்ளி செல்லும் வயதில் உள்ள சிறுவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கையை கோர்ட்டுகள் கண்டு கொள்ளவில்லை. என்றாலும் கனிமொழியிடம் தன்னம்பிக்கை குறையவில்லை. திகார் ஜெயிலில் ஆறாம் எண் அறையில் 15-க்கு 10 அடி ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர், தன்னை சந்திக்க வருபவர்களுக்கு ஆறுதல் கூறும் அளவுக்கு பக்குவம் பெற்றிருந்தார். மிகக் குறுகிய காலத்தில் சக பெண் கைதிகளுடன் மனம் விட்டுப் பேசி பழகினார்.

சில பெண் கைதிகளின் அவல நிலை கண்டு கண் கலங்கினார். அவர்களுக்கு உதவிகள் செய்வதாக கூட கனிமொழி உறுதி அளித்துள்ளாராம். சிறையில் இருந்த 194 நாட்களையும் கனிமொழி எம்.பி. வெறுமனே கழித்து விடவில்லை. பெண் கைதிகள் கைத் தொழில் கற்றுக் கொள்ளும் பகுதிக்கு சென்று பார்த்தார். பெண் கைதிகள் மறுவாழ்வு பெற அளிக்கப்படும் பயிற்சிகளை அறிந்து கொண்டார்.

சிறைக்குள் அவர் ஏராளமான புத்தகங்களை படித்து முடித்துள்ளார். நிறைய குறிப்புகள் எழுதியுள்ளார். படிக்கும் நேரம் தவிர சில சமயங்களில் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்பார்த்தார். அவர் தொலைக்காட்சி வைத்துக் கொள்ள திகார் ஜெயில் நிர்வாகம் அனுமதி கொடுத்திருந்தது.

கடந்த மாதம் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பிறகே அவர் விடுதலை ஆவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான 5 தனியார் டெலிகாம் அதிகாரிகளை டெல்லி ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்த போது, கனிமொழிக்கும் ஜாமீன் கிடைப்பது பிரகாசமானது. என்றாலும் பல தடைகளை கடந்துதான் கனிமொழி ஜாமீன் பெற்றுள்ளார். பல தடவை எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த அவருக்கு நேற்று முன்தினம் தான் நிம்மதி பெருமூச்சு விடும் தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு வழங்கியது.

அன்று கோர்ட்டு நடை முறைகள் நிறைவு பெற இயலாததால் ஒரு நாள் கழித்து நேற்றிரவு கனிமொழி திகார் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார். டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டுக்கு நேற்று வந்த கனிமொழி மிகவும் ரிலாக்ஸ் ஆகக்காணப்பட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் அவர் முகத்தில் மலர்ச்சியைப் பார்க்க முடிந்தது. அவரிடம் நிருபர் ஒருவர், "விடுதலை ஆனதை இன்று கொண்டாடுவீர்களா?'' என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த கனிமொழி, ''இல்லை, இல்லை. அப்படி எந்த ஒரு திட்டமும் என்னிடம் இல்லை. விடுதலை ஆனதும் எனது வீட்டுக்கு சென்று ஓய்வு எடுப்பேன். மேலும் எனக்கு இங்கு (டெல்லியில்) நெருங்கிய தோழிகள் யாரும் இல்லை. எல்லாரும் சென்னையில் இருக்கிறார்கள்'' என்றார். உற்சாகமாக அனைவரிடமும் பேசியபடி இருந்த கனிமொழி, அதே உற்சாகத்துடன் நேற்று மாலை பாட்டியாலா கோர்ட்டில் இருந்து திகார் சிறைக்கு சென்றார்.

அங்கு அவரை விடுவிப்பதற்கான நடைமுறைகள் நடந்தன. அந்த நடைமுறைகள் முடிந்ததும் ஜெயிலில் இருந்து வெளியேற கனிமொழி தயாரானார். அப்போது அவர் மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார். தன்னுடன் கடந்த 6 மாதமாக சிறையில் பழகிய சக பெண் கைதிகளுடன் மனம் விட்டுப் பேசினார். அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பிறகு ஜெயில் கேண்டினில் இருந்து இனிப்பு வகைகளை வர வழைத்து பெண் கைதிகளுக்கு வினியோகித்தார்.

அதோடு இதுவரை தன் அறையில் பயன்படுத்தி வந்த டி.வி. பெட்டியையும் அந்த பெண் கைதிகள் பயன்படுத்திக் கொள்ள பரிசாக வழங்கினார். கனிமொழியின் இந்த செய்கையால் மற்ற பெண் கைதிகள் மனம் நெகிழ்ந்தனர். சில பெண் கைதிகள் கனிமொழியை அரவணைத்து நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர். அவர்களிடம் கனிமொழி நன்றி தெரிவித்து விடை பெற்றார்.

சிறை கண்காணிப்பாளர் அறைக்கு வந்த கனிமொழி, விடுதலை ஆவதற்கான ஏட்டில், கையெழுத்திட்டார். அப்போது சிறை ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 7.35 மணிக்கு அவர் வெளியேற தயாரானார். மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, உள்பட 10-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவரை வரவேற்க திகார் ஜெயில் வாசலில் நின்றனர். அவர் எந்த வாசல் வழியாக வெளியே வருவார் என்பது அறிவிக்கப்படவில்லை.

இறுதியில் பின்புற வாசல் வழியாக அவர் வெளியேறிச் சென்றார். கார்கள் அணி வகுத்துச் செல்ல அவர் மத்திய டெல்லி பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 6 மாத சிறை வாசத்துக்குப் பிறகு வருவதால் கனிமொழி எம்.பி.யின் வீடு நேற்றிரவு குதூகலமாக மாறியது. கனிமொழியை வரவேற்கும் வகையில் அந்த வீட்டில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வீட்டு வாசலில் தமிழர்களின் பாரம்பரிய பண் பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கோலம் போடப்பட்டிருந்தது. கனிமொழி காரில் வந்து இறங்கியதும் டி.ஆர்.பாலு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அங்கு இருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

டெல்லி தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த குதூகலமான வரவேற்பு கனிமொழியை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. சென்னை வந்து தன் தந்தையை காண வேண்டும் என்பதில் அவர் மிகவும் ஆர்வமுடன் உள்ளார். கோர்ட்டு உத்தரவுப்படி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின் போது அவர் கண்டிப்பாக கோர்ட்டில் இருக்க வேண்டும். எனவே இன்னும் 2 நாள் கழித்து கனிமொழி சென்னை வர உள்ளார். அவரை வரவேற்க தி.மு.க. நிர்வாகிகள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவி கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் கனிமொழி முன்பைவிட இன்னும் அதிக சுறுசுறுப்புடன் கட்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள் வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment