Monday, October 31, 2011

புலிகள் கூட்டம் பண்ணும் அட்டகாசம்! ராஜீவ் கொலையாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆசைகள் என்ன? ருசிகர தகவல்கள்!

Monday, October 31, 2011
ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன். ஆகிய 3 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த மாதம் 9-ந்தேதி தண்டனையை நிறைவேற்ற முடிவாகி இருந்தது.

ஆனால் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு, தண்டனையை நிறைவேற்ற தடை பெறப்பட்டது. கருணை மனு மீது முடிவு எடுக்க நீண்ட காலதாமதம் ஆகியுள்ளது. சிறையில் 20 ஆண்டுகளை கழித்து விட்டோம். எனவே எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இவர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். சிறையில் இருந்து வெளியேறி சமூகத்துடன் இணைந்து மகிழ்ச்சியாக வாழப்போகிறோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர். இவர்களிடம் இப்போது எந்த சலனமும் காணப்படவில்லை.

வேலூர் சிறையில் இவர்கள் 3 பேருக்கும் தனித்தனியே வேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறை வளாகத்தில் உள்ள கோவிலில் சாந்தன் பூசாரியாக உள்ளார். மற்ற கைதிகளுக்கு யோகாவும், தியானமும் கற்றுத் தருகிறார். சிறையில் இருந்தபடியே எம்.சி.ஏ. படித்து முடித்துள்ள பேரறிவாளன், கைதிகளுக்கு கம்ப்யூட்டர் பாடம் நடத்துகிறார். அங்குள்ள லைப்ரரியையும் பராமரித்து வருகிறார்.

முருகன் விளையாட்டு வீரர் என்பதால், சக கைதிகளுடன் சேர்ந்து கைப்பந்து மற்றும் பிற விளையாட்டுகளை விளையாடி வருகிறார்.

சிறையில் இருந்து விடுதலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை கொண்டுள்ள இவர்கள், ஆளுக்கொரு ஆசையை வைத்துள்ளனர்.

முருகன் கூறியதாவது:-

எங்களுக்கு செப்டம்பர் 9-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுவதாக இருந்தது. இதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. இதன் மூலம் எங்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. நாங்கள் மூவரும் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

எங்களுக்கு நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்ததும், சக கைதிகள் எங்களை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் படித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நாங்கள் இப்போது உயிர் பிழைத்துள்ளோம். ஒருநாள் எங்களுக்கு விடிவு பிறக்கும். நாங்கள் சுதந்திர காற்றை சுவாசிப்போம் என்று உறுதியாக நம்புகிறோம்.

நான் இலங்கை பிரஜை என்ற போதிலும், மதுரை மீனாட்சி அம்மனின் பக்தன் ஆவேன். சிறையில் இருந்து விடுதலை ஆனதும் மனைவி நளினியுடன் மதுரை சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவேன். யாழ்ப்பாணத்தில் உள்ள எங்களது குல தெய்வம் கோவிலுக்கு செல்லவும் விருப்பம் உள்ளது.

ஒரு பெண்ணுக்கு கணவனாகவும், குழந்தைக்கு தந்தையாகவும் இருப்பதால் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன. கடந்த 20 வருடங்களாக பெற்றோரின் பாசமும், பராமரிப்பும் இன்றி எங்கள் மகள் வளர்கிறாள். விரைவில் நாங்கள் ஒன்றாக இணைவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு முருகன் கூறினார்.

சாந்தன் கூறியதாவது:- சிறையில் உள்ள கோவிலில் பூசாரியாக இருக்கும் நான், ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டுள்ளேன். விடுதலை கிடைத்ததும், நேராக இமயமலை செல்வேன். ஆன்மீக வழியை தேர்வு செய்து மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்றுவேன். மரண பயத்தை போக்கி மன உறுதியை எனக்கு தந்தது ஆன்மீகம்தான்.

ஷீரடி சாய்பாபாவின் பக்தன் நான். முதலில் ஷீரடிதான் செல்வேன். எனக்கு குடும்பம் என்று எதுவும் கிடையாது. எனது பெற்றோரும் எங்கு இருக்கிறார்கள்? உயிருடன் உள்ளார்களா? என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. எனவே சொந்த நாட்டுக்கு (இலங்கை) செல்லும் திட்டம் எதுவும் இல்லை.

இவ்வாறு சாந்தன் தெரிவித்தார்.

பேரறிவாளன் கூறுகையில், நான் வீடு திரும்ப வேண்டும் என்று என்னைவிட என் அம்மாதான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்புடன் உள்ளார். அவரது ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. வெளியில் வந்த உடன் சிறையில் கற்ற கல்வியை கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன்.

உலகில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த இயக்கத்தில் இணைந்து மரண தண்டனைக்கு எதிராக நானும் போராடுவேன் என்றார்.

எங்கள் விடுதலைக்கும், மரண தண்டனை ஒழிப்புக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்று 3 பேரும் கூறினார்.

Monday, October 31,2011 ஆனந்த் said:

நீங்கள் செய்த பாக்கியம் இந்தியாவில் சிறை பெற்றதுதான் இதே அரபு நாடுகளாக இருந்திருந்தால், இன்று புத்தன் போல பேச நீங்கள் இருந்து இருக்க மாட்டீர்கள். நீங்கள் செய்தது இமாலய தவறு அதற்கு மரணம் ஒன்றே தீர்வு. இத்தனை நாள் நீங்கள் சிறையில் இருந்தேன் என்பது உங்கள் அதிர்ஷ்டம் நீங்கள் சிறையில் என்ன கிழித்தீர்கள் என்பது தான் உங்கள் வாயாலேயே சொல்லிவிட்டீர்களே ! இதில் வெளியே வந்து வேறு கிழிக்கனுமா ?
இவர்களை தூக்கிலிட என் ஆவி துடிக்கிறது .....

No comments:

Post a Comment