Pages

Tuesday, April 8, 2014

ஜார்ஜுக்கு பதிலாக சென்னை போலீஸ் கமிஷனராக திரிபாதி பொறுப்பேற்றார்!

Tuesday, April 08, 2014
சென்னை::பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜத்தை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கப்பட்டது.
 
அதை ஏற்று கடந்த சனிக்கிழமை டி.ஜி.பி. ராமானுஜம் தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். தமிழகத்தில் தேர்தல் பணிகளை கவனிக்க போலீஸ் வீட்டு வாரிய தலைவர் அனுஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் தனது பணிகளையும் தொடங்கினார்.
இந்நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேற்று மாலை அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி நியமிககப்பட்டார். ஜார்ஜ் சிறைத்துறைக்கு மாற்றப்பட்டார்.
 
இதைத்தொடர்ந்து இன்று காலை 11.15 மணிக்கு போலீஸ் கமிஷனராக திரிபாதி பொறுப்பேற்று கொண்டார். மாற்றப்பட்ட கமிஷனர் ஜார்ஜ் அவரிடம் பணிகளை ஒப்படைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
 
அவரை 8–வது மாடியில் இருந்து கீழ்தளம் வரை வந்து புதிய கமிஷனர் திரிபாதி வழியனுப்பி வைத்தார். பின்னர் கூடுதல் கமிஷனர்கள் கருணாசாகர், சபாஷ்குமார், நல்லசிவம் மற்றும் மாநகர இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோருடன் திரிபாதி சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.
வழக்கமாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்கும் அதிகாரிகள் நிருபர்களுக்கு பேட்டி அளிப்பார்கள். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் புதிய கமிஷனராக பொறுப்பேற்ற திரிபாதி அதுபோன்ற பேட்டி எதுவும் கொடுக்கவில்லை.
 
பத்திரிகை, டி.வி. மற்றும் புகைப்பட நிபுணர்கள் போட்டோ எடுக்கவும் அனுமதிக்கவில்லை. கமிஷனர் அலுவலக புகைப்பட கலைஞர்கள் மட்டுமே பதவி ஏற்பு நிகழ்ச்சியை போட்டோ எடுத்தனர்.

No comments:

Post a Comment