Pages

Tuesday, April 8, 2014

இலங்கை அரசின் செயற்பாடுகளே புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்பாமைக்கு காரணம்- விக்கிலீக்ஸ் தகவல்

Tuesday, April 08, 2014
இலங்கை::புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் நாடு திரும்ப விரும்பாமைக்கு இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் பெட்ரீசியா ஏ புட்டினிஸ்(Patricia A. Butenis), இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
 
கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலாம் தேதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் வாசிங்டன் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புட்டினிஸ் கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி, உதவி ராஜாங்க செயலாளர் ராபர்ட் ஓ பிளேக்கின் வலியுறுத்தலுக்கு அமைவாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக இருந்த ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்துள்ளார்.
 
இதன்போது சரத் ஃபொன்சேகா கைது செய்யப்பட்டமை, எம்.டி.வி வலையமைப்பின் மீதான தாக்குதல் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன், இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை விதிக்க முற்படுவதாக கூறிய பாலித்த கோஹன்னவை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அமைச்சில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கை போன்ற விடயங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறான அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் வெளிநாடுகளுக்கு பிழையான சமிக்ஞைகளை அனுப்புவதாகவும், அதனாலேயே புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து, அபிவிருத்திகளுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றும் புட்டினிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக போகொல்லாகம உறுதியளித்திருந்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment