Tuesday 10 December 2013
லண்டன்::தினமும் 5 கோடி செல்போன் உரையாடல்களை ரகசியமாக பதிவு செய்கிறது அமெரிக்க உளவுத்துறை’ அமெரிக்க உளவுத்துறையான என்.எஸ்.ஏ. நாள்தோறும் 5 கோடி செல்போன் உரையாடல்களை ரகசியமாக பதிவு செய்து வருவதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் ஊழியர் ஸ்நோடென் வெளிட்ட கோப்புகளை அடிப்படையாக வைத்து இந்த பரபரப்பு செய்திகளை அந்நாட்டின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கர்களின் செல்போன் அழைப்புகள் மட்டுமன்றி, அமெரிக்க தயாரிப்பு செல்போன்கள் உலகின் எந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்டாலும், அதில் இருந்து மேற்கொள்ளப்படும் அழைப்புகளையும் என்.எஸ்.ஏ. உளவு அமைப்பு பதிவு செய்வதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத என்.எஸ்.ஏ. மூத்த அதிகாரி ஒருவரின் பேட்டியையும் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது.
செல்போன் நிறுவனங்கள் பயன்படுத்தும் கேபிள் வயர்களில் ரகசிய கருவிகளை பொருத்தி, அதன்மூலம் செல்போனில் இருந்து மேற்கொள்ளப்படும் அழைப்புகள், குறுந்தகவல்கள் உள்ளிட்டவை என்.எஸ்.ஏ. அமைப்பால் சேகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ரகசியமாக பதிவு செய்யப்படும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் உள்ளிட்டவற்றை வெளிநாட்டில் உள்ள தனது எதிரிகளின் இலக்குகளை குறிவைக்க என்.எஸ்.ஏ. பயன்படுத்துவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா, ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அனுப்பப்படும் இ மெயில்களை என்.எஸ்.ஏ. அமைப்பு இடைமறித்து சேகரிப்பதாக குற்றம்சாட்டி, அதற்கான ஆதாரங்களை ஸ்நோடென் வெளியிட்டார். இதனால் ஸ்நோடெனை கைது செய்ய அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவே, அந்நாட்டில் இருந்து வெளியேறிய அவர் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment