Pages

Tuesday, December 10, 2013

2020 ஆம் ஆண்டிற்குள் 40 இலட்சம் புதிய குடிநீர் வழங்கல் திட்டங்கள்: பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ!

Tuesday 10 December 2013
இலங்கை::2020 ஆம் ஆண்டிற்குள் 40 இலட்சம் புதிய குடிநீர் வழங்கல் திட்டங்களை நடை முறைப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
இந்த வருடம் வரை 19 இலட்சம் புதிய குடிநீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் 2013 ல் மட்டும் 38,000 குடிநீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 2020 ற்குள் இதனை 40 இலட்சமாக்குவதே இலக்காகுமெனவும் தெரிவித்தார்.

குடிநீருக்கான கேள்வி வருடத்திற்கு வருடம் பெருமளவில் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, இந்தியா, ஜப்பான் உட்பட 20 நிதி நிறுவனங்களின் உதவியுடன் மேற்படி குடிநீர்த்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய பிரதியமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:

 நாட்டில் சகலருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வடக்கு, கிழக்கு உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் பல புதிய திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அதேவேளை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதுவரை காலமும் ஈட்டி வந்துள்ள நட்டத்தை ஈடுசெய்து அதனை இலாபத்தில் இயங்கும் நிறுவனமாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு இந்த சபை 280 மில்லியன் நட்டத்திலேயே இயங்கியது. எனினும் 2013 ஆம் ஆண்டில் 389 மில்லியன் ரூபாவை இலாபமாகப் பெறும் நிறுவனமாக இச்சபை மாற்றப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனை கொள்கை திட்டத்திற்கிணங்க ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

நீர் விரயம் தவிர்க்கப்பட்டுள்ளதுடன் அந்த விசேட செயற்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா முதலீடு செய்யப் பட்டுள்ளது. சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு பெளஸர் மூலம் சுத்தமான குடிநீரை வழங்கும் செயற்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இத்திட்டத்தின் மூலம் நீரினால் ஏற்படும் சகல நோய்களையும் தவிர்க்க முடியும். ஹம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கும் குடிநீரை வழங்கும் பாரிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வடக்கில் கிளிநொச்சி, ஒட்டுசுட்டான் போன்ற பகுதிகளிலும் தற்போது பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ‘ஜய்க்கா’ நிறுவனத்தின் நிதி உதவியுடன் கிளிநொச்சி குடிநீர்த் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2013ஆண்டிற்குள்  தெற்கிற்கான பாரிய குடிநீர்த் திட்டம் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment