Pages

Friday, November 8, 2013

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க, சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடுவோம்: ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் பேரன் சம்பத் சேதுபதி!

Friday, November 08, 2013
சென்னை::இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க, சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடுவோம்,'' என, ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் பேரன் சம்பத் சேதுபதி தெரிவித்தார்.

இது குறித்து, சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: இந்தியாவில் ஆட்சி நடத்திய சமஸ்தானங்களில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் சமஸ்தானமும் ஒன்று. இந்த சமஸ்தானத்துக்கு வரலாற்று பெருமைகள் உள்ளன. இந்த சமஸ்தானத்தால் பல நூறு ஆண்டுகள் நிர்வகிக்கப்பட்ட தீவுகளில், கச்சத்தீவும் ஒன்றாகும். இந்த தீவில், மூலிகை, சிப்பிகளை சேகரிக்கும் உரிமை, அந்த காலத்திலேயே வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது. விக்டோரியா மகாராணி அளித்த சாசனத்தில், "கச்சத்தீவு, ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமானது' என, குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த தீவை, இந்திய அரசு, 1974ல் இலங்கைக்கு தாரை வார்த்தது. அப்போது இருநாட்டு பிரதமர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாட்டு மீனவர்களும், பாரம்பரிய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொள்ளலாம். இங்கு கடல் எல்லையே இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது எல்லை தாண்டியதாக, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர்; இலங்கை சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில், 470க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அவலநிலையை போக்க, "கச்சத்தீவை, இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உணர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். கச்சத்தீவு குறித்த ஆவண கண்காட்சி, எல்லா மாநிலங்களிலும் நடத்தப்படும். அதில் இலங்கை கடற்படை தாக்குதலால் கொல்லப்பட்ட, தமிழர்களின் புகைப்படங்கள் இடம் பெறும்.
அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள், சர்வதேச அமைப்புகளிடம் இப்பிரச்னையை விளக்குவோம்; அவர்கள் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment