Pages

Tuesday, March 5, 2013

இலங்கை மற்றும் அமெரிகாவிற்கு இடையே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில், முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான இணக்கப்பாடு குறித்த கலந்துரையாடல்!

Tuesday, March 05, 2013
ஜெனீவா::இலங்கை மற்றும் அமெரிகாவிற்கு இடையே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில், முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான இணக்கப்பாடு குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஏசியன் ரிபியூன் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு அமைய இலங்கை அரசாங்கம், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய கொள்கைகளில் மென்மைப் போக்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக அமெரிக்காவிற்கான நிலைப்பாட்டிலும், மென்மை போக்கு கடைப்பிடிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பின்னடைவின் கீழ் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில், நிபந்தனைகள் விதிக்கப்படலாம் எனவும் அந்த இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக எமது செய்திப் பிரிவு, வெளிவிவகார அமைச்சசை தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு பதிலளித்த அதன் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர், மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் ராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.

இதற்கு அமைய அமெரிக்காவுடன், பல்வேறுபட்ட பேச்சு வார்த்தைகள் இடம்பெறுவதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில், தெரிவு செய்யப்பட்ட பரிந்துரைகளை மாத்திரமே இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப் படுத்தப்படுவதாக மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்திற்காக முன்னெடுத்துள்ள செயல்பாடுகள் தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல, மீள் குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் வட பகுதியில் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதாக நவநீதம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, எதிர்காலத்தில் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் தொடர்பாக ஜெனீவா மாநாட்டில், இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியுடன் கலந்துரையாடியதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மாநாட்டில் முன் வைக்கப்பட்ட யோசனையை அடிப்படையாக கொண்டு இந்த முறையும் பிரேரணை முன் வைக்கப்படவுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க திணகை;கள பேச்சாளர் பற்றிக் வென்ரல் வார இறுதி செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்திருந்தார்.

இதேவேளை, உலகத் தமிழர் பேரவை இலங்கை அரசாங்த்திற்கு எதிராக நடத்திய கூட்டத்திற்கு பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம் வழங்கப்பட்டமையை இலங்கை கண்டித்துள்ளது.

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு இது தொடர்பில் தமது கண்டனத்தை பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சுக்கு அனுப்பிவைத்துள்ளதாக அதன்பேச்சாளர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற உலகத் தமிழர் கூட்டத்தில் பிரித்தானிய உதவிப் பிரதமர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்

No comments:

Post a Comment