Wednesday,June,13,2012லண்டன்::பல்வேறு நாட்டின் ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, "விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், தன் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என, பிரிட்டன் சுப்ரீம் கோர்ட்டில் கோரியுள்ளார்.
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உட்பட பல்வேறு ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணைய தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, ஸ்வீடன் அரசு இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து அசாஞ்ச், பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். ஸ்வீடன் கோரிக்கைப்படி, இவர் கைது செய்யப்பட்டார். லண்டன் கோர்ட் இவருக்கு ஜாமின் வழங்கியது. இதற்கிடையே அசாஞ்சை, தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி, ஸ்வீடன் கோரியது. இதை எதிர்த்து அசாஞ்ச், மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின், ஏழு நீதிபதிகளில் ஐந்து நீதிபதிகள் அசாஞ்சை, ஸ்வீடனிடம் ஒப்படைக்கும்படி, கடந்த மாதம் உத்தரவிட்டனர். இதற்கிடையே தன் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனக் கோரி, பிரிட்டன் சுப்ரீம் கோர்ட்டில் அசாஞ்ச், நேற்று மனு செய்துள்ளார். "ஸ்வீடன் நாட்டிடம் அசாஞ்சை ஒப்படைப்பது தொடர்பான வழக்கை, நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்கலாம் அல்லது தள்ளுபடி செய்யலாம். எனினும், இந்த வழக்கு விசாரணை குறித்த தேதி, இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என, சுப்ரீம் கோர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment