ஆMonday, December 15, 2014
ஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு உணவகத்தில் நுழைந்த தீவிரவாதி ஒருவன் துப்பாக்கி முனையில் 13 பேரை பிணையக்கைதிகளாக சிறைப்பிடித்து வைத்துள்ளான். அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் கொடி காணப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். தற்போது அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள முக்கிய அலுவலகங்களிலிருந்து பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றபட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் கொடி உள்ளதாக கூறப்படுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிணையக்கைதிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது கவலையளிப்பதாகவும், பாதுகாப்பு படையினருக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் கூறியுள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து மேலும் பேசிய பிரதமர் டோனி அபாட், தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிப்போம். 13 பேரை பிடித்து வைத்துள்ள தீவிரவாதிகளின் நோக்கம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
ஆஸ்திரேலிய மக்கள் அச்சப்படாமல் வழக்கம்போல அவரவர் பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். ஏதாவது சந்தேகம்படும் படியான நடவடிக்கைகள் தென்பட்டால் மக்கள் உடனடியாக தேசிய பாதுகாப்பு அமைப்பை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இது குழப்பதை ஏற்படுத்த நடத்தப்படும் ஒரு அச்சுறுத்தல் சம்பவம். இதுபோன்ற நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
இதுபோன்று துயரம் மற்றும் திகிலூட்டும் பிரச்சனைகளில் சிக்கி உள்ளவர்களை மீட்க தொடர்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.







No comments:
Post a Comment