Pages

Wednesday, December 24, 2014

அமெரிக்கா மீது தாக்குதல்: வடகொரியா எச்சரிக்கை!!

Wednesday, December 24, 2014
சியோல்::சோனி நிறுவன திரைப்பட விவகாரத்தில் வடகொரியா குறித்த தவறான தகவல்களை பரப்புவதை அமெரிக்க அதிபர் ஒபாமா நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சோனி பிக்சர்ஸ் நிறுவனம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியிடுவதற்காக தி இண்டர்வியூ என்று திரைப்படத்தை எடுத்தது. அமெரிக்க சிஐஏ அமைப்பைச் சேர்ந்த இருவர் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை கொலை செய்யும் சதித் திட்டத்துடன் அவரிடம் இண்டர்வியூ நடத்தச் செல்கின்றனர் என்பதே இப்படத்தின் கதை என்று தகவல் வெளியானது. மேலும் இதில் கிம் ஜோங் உன்னை மிகவும் நகைச்சுவையாக சித்தரித்து அவரை கேலி செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தின் மீது சில ஹேக்கர்கள் இணையம் வழியாக தாக்குதல் நடத்தினர். இதனால் அந்நிறுவனம் பெரும் பிரச்சினைக்கு உள்ளானது. இதையடுத்து தி இண்டர்வியூ திரைப்படம் வெளியிடுவதை ஒத்திவைப்பதாக சோனி பிக்சர்ஸ் அறிவித்தது.

இதையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா வடகொரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். வடகொரியாதான் சோனி நிறுவனம் மீது இணையம் வழியாக தாக்குதல் நடத்தியது என்று குற்றம்சாட்டினார். மேலும் வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பயந்து சோனி நிறுவனம் தனது திரைப்படத்தை வெளியிடுவதை நிறுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் சோனி நிறுவனத் தின் மீது நடத்தப்பட்ட இணைய வழி தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று அறிவித்த வடகொரியா இது தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து விசாரணை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியது. அமெரிக்க திரையரங்குகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வடகொரியா சதித் திட்டம் திட்டுவதாக அமெரிக்கா சந்தேகமடைந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா, அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவுக்கு எதிராக தேவையற்ற வதந்திகளை பரப்பு வதை ஒபாமா நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அமெரிக்கா மீது வடகொரியா தாக்குதல் நடத்தும். அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகையும், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனும்தான் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது என்று வடகொரியா கூறியுள்ளது. 

No comments:

Post a Comment