Pages

Monday, October 13, 2014

வட மாகாணசபையின் (புலிகளின்) முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

Monday,October, 13, 2014
இலங்கை::வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 மாகாண சபை உறுப்பினர்கள் இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட் போன்ற கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளே இவ்வாறு நடவடிக்கை எடுக்க உள்ளன.
 
அண்மையில் வட மாகாணசபையின் முதலமைச்சரது உத்தியோகபூர்வ இல்லத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களே நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த காலங்களில் ஆயுதங்களை ஏந்திய நபர்களுடன் பணியாற்றுவது சிரமம் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டதாகவும், இதனால் புளொட்,  ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் டெலோ கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் மாகாண சபை உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் 13 உறுப்பினர்கள் மாகாணசபையில் அங்கம் வகிக்கின்றனர் எனவும் அவர்கள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றினால் என்ன நடக்கும் என்பதனை விக்னேஸ்வரன் புரிந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
விக்னேஸ்வரனின் கருத்தினைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என சிங்களப் பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment