Wednesday, June 18, 2014
கோலாலம்பூர்::இந்தோனேசியாவில் இருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக படகில் பயணம் செய்த 97 பேரில் 66 பேரை காணவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று மலேசிய கடற்படையினர் தெரிவித்தனர். இந்தோனேசியாவின் கடற்கரை பகுதியில் இருக்கும் ஏழை மக்கள், அப்பகுதிகளில் வருமானம் இல்லாததால், சட்டவிரோதமாக படகுகளில் மலேசியாவுக்கு சென்று குடியேற முயற்சித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி பலியாகி வருவதும் நடைபெறுகிறது.இந்தோனேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு பெண்கள், குழந்தைகள் உட்பட 97 பேர் ஒரு படகில் மலேசியாவுக்கு புறப்பட்டனர். அவர்கள் சென்ற படகு நேற்றிரவு மலாக்கா ஜலசந்தியை கடந்து, மலேசியாவின் மேற்கு பகுதியில் சென்ற போது நடுக்கடலில் கவிழ்ந்து மூழ்கியது.இதுகுறித்து, தகவல் அறிந்ததும் மலேசிய கடற்படை அமலாக்க படையினர் ஒரு படகில் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். நடுக்கடலில் தத்தளித்த 31 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
காணாமல் போன 66 பேர் நடுக்கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி, மலேசிய கடற்படை அதிகாரி முகமது ஜுரி கூறுகையில், ‘இந்தோனேசியாவில் இருந்து 97 பேர் சட்டவிரோதமாக படகில் வந்துள்ளனர். படகு கவிழ்ந்ததில் அனை வரும் கடலில் தத்தளித்தனர். மலேசிய கடற்படை சென்று 31 பேரை மீட்டுள்ளது. மீதி 66 பேரை தேடும் பணி நடக்கிறது. அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது’ என்றார். -
No comments:
Post a Comment