Pages

Monday, April 21, 2014

இலங்கையின் சுகாதார துறைக்கு ஜப்பான் தொடர்ந்து உதவும் -களுவாஞ்சிகுடியில் பிரதி ஜப்பானிய பிரதி தூதுவர் செல்வி அசாகோ ஒசாய்!

Monday, April 21, 2014
இலங்கை::இலங்கையின் சுகாதார துறையின் வளர்ச்சிக்கு ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்து உதவிகளை வழங்கும் என இலங்கைக்காக ஜப்பானிய பிரதி தூதுவர் செல்வி அசாகோ ஒசாய் தெரிவித்தார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் ஜெய்க்கா திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் முகமாக ஜப்பானிய பிரதி தூதுவர் செல்வி அசாகோ ஒசாய் நேற்று களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அவரை வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன்,கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் தேவராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த விஜயத்தின்போது ஜெய்க்கா திட்டத்தின் சிரேஸ்ட பிரதிநிதி கியோசி அமடா உட்பட ஜப்பானிய தூதரக அதிகாரிகள்,ஜெய்க்கா திட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளின் அடிப்படையில் சுகாதார அமைச்சின் கோரிக்கையின் அடிப்படையில் ஜப்பானிய அரசாங்கத்தினால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக 427 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.

இதன் கீழ் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் பட விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பௌதீக வளங்களின் பற்றாக்குறையினை தீர்க்கும் வகையில் பல்வேறு கட்டிட தொகுதிகள் அமைக்கப்பட்டுவருவதுடன் மருத்து உபகரணங்களும் இதன் ஊடாக வழங்கப்படவுள்ளன.

அத்துடன் வைத்தியசாலையின் நவீனத்துவத்தினை அதிகரிக்கும் வகையில் ஜப்பானிய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நவீன தொழில் நுட்பட உதவிகளும் இந்த வைத்தியசாலைக்கு இந்த திட்டம் மூலம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

இதன்போது ஜெயக்கா திட்டத்தின் மூலம் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்களையும் தூதுவர் உட்பட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment