Monday, April 14, 2014

பா.ஜ.க. - காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்: முதல்வர் ஜெயலலிதா பேச்சு!

Monday, April 14, 2014
கரூர்::காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்த பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். 
கரூர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் தம்பித்துரையை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனையாக விளங்குவது காவேரி நதிநீர்ப் பிரச்சனை. காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், காவேரி பிரச்சனையைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். 1998_ஆம் ஆண்டு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதா கட்சியுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து, மத்திய கூட்டணி ஆட்சியிலும் பங்கு பெற்றது. அப்போது காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை வரப் பெறவில்லை. இடைக்கால ஆணை தான் அமலில் இருந்தது. அந்த இடைக்கால ஆணையை செயல்படுத்த அதிகாரிகள் கொண்ட ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அந்த அமைப்பிற்கு காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை செயல்படுத்துகின்ற அதிகாரம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள அணைகளை இயக்கும் அதிகாரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்றும் நான் கோரிக்கை  வைத்தேன். அதை செய்வதற்குப் பதிலாக அன்றைய பாரதப் பிரதமர் 
திரு. வாஞுபாய், இந்திய பிரதமரை தலைவராகவும், சம்பந்தப்பட்ட நான்கு மாநில முதலமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட காவேரி நதிநீர் ஆணையத்தை அமைத்தார். இதனை, அப்போதே நான் எதிர்த்தேன்.  இப்படிப்பட்ட ஓர் ஆணையத்தால் எந்தப் பயனும் இருக்காது என்று உணர்ந்ததால் தான் அதை நான் கடுமையாக எதிர்த்தேன். அதிகாரம் படைத்த அதிகாரிகள் குழுவை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு அமைக்க மறுத்ததால் தான், இனி அந்த அரசால் தமிழ்நாட்டிற்கு எந்த நீதியும் கிடைக்காது என்பதால் தான், பா.ஜ.க.  தலைமையிலான மத்திய அமைச்சரவையிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக் கொண்டதோடு, அந்த பி.ஜே.பி. கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் 1999_ஆம் ஆண்டு நான் திரும்பப் பெற்றேன். 
அப்போது, தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடைபெற்று வந்தது. அந்தத் தருணத்தில் பாரதீய ஜனதா கட்சி கருணாநிதியை அணுகி காவேரி நதிநீர் ஆணையம் அமைப்பதற்கான ஒப்புதலைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்த தி.மு.க. மத்திய அமைச்சரவையிலும் அங்கம் வகித்தது. நான் தெரிவித்தது போலவே காவேரி நதிநீர் ஆணையத்தால் தமிழ்நாட்டிற்கு நீதி வழங்கப்படவே இல்லை. காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை செயல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் காவேரி நதிநீர் ஆணையத்தால் மேற்கொள்ள இயலவில்லை. அந்த அமைப்பால் தமிழகத்திற்கு எந்த விதப் பயனும் ஏற்படவில்லை.  
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும், ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பு சம அளவிலேயே உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலும் காங்கிரஸ் கட்சியாலும், பாரதீய ஜனதா கட்சியாலும் ஆட்சி அமைக்கவே முடியாது. தமிழ் நாட்டில் எந்தக் காலத்திலும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது.  தமிழ் நாட்டில் எந்தக் காலத்திலும் பா.ஜ.க.வாலும் ஆட்சி அமைக்க முடியாது.  எனவே தான், மத்தியிலே பாரதீய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தாலும், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தாலும் இரு கட்சிகளிடையே வேறு எந்தப் பிரச்சனைகளில் மாறுபாடு இருந்தாலும், வேறு எது எப்படி இருந்தாலும் காவேரி நதிநீர்ப் பிரச்சனையை பொறுத்தவரை பி.ஜே.பி._யும், காங்கிரசும் ஒரே விதமான கொள்கையைத் தான் கடைபிடித்து வருகின்றன. தமிழ்நாட்டை, தமிழக மக்களை இரு கட்சிகளுமே வஞ்சித்து வருகின்றன.  
அதை போலவே, கர்நாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா ஆட்சி இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், வேறு எதில் அவை மாறுபட்டு இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவேரி நீர் கூட திறந்து விடக் கூடாது என்பதில் இரு கட்சிகளுமே உறுதியாக உள்ளன, தீவிரமாக  செயல்படுகின்றன.  
எனவே, காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது. பி.ஜே.பி_க்கும் வாக்களிக்கக் கூடாது.  உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்; வருகின்ற தேர்தலில் நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது, பி.ஜே.பி_க்கும் வாக்களிக்கக் கூடாது.  
காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களையும், பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்களையும், 
இந்தத் தேர்தலில் அவர்கள் போட்டியிடுகின்ற அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  செய்வீர்களா? 
நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்) 
பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் காவேரி நதிநீர்ப் பிரச்சனை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் இதைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. க்ஷதுட தலைவர்கள் தமிழகத்திற்குரிய காவேரி நீரை திறந்து விடுவதாக சொன்னாலே, கர்நாடக மாநிலத்தில், பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்குகள் கிடைக்காது. தமிழ்நாட்டிற்கு காவேரி நீரை திறந்து விடுகிறோம் என்று பி.ஜே.பி. சொன்னாலே கர்நாடகத்தில் இந்த மக்களவை தேர்தலில் பி.ஜே.பி. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. எனவே, இதைப் பற்றி பாரதீய ஜனதா கட்சியினர் எதுவுமே பேச மாட்டார்கள். பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள வைகோ, டாக்டர் ராமதாஸ் மற்றும் இதர கட்சியினர் நமக்குரிய காவேரி நதிநீரை பெறுவதற்கு பாரதீய ஜனதா கட்சியிடம் இருந்து என்ன உத்தரவாதத்தினை பெற்றுள்ளனர்? அவர்கள் தமிழக மக்களுக்கு அதனை தெரிவிக்க வேண்டும். நமக்குரிய காவேரி தண்ணீரை அளிக்காமல், நம்மை ஏமாற்றியது தான் கடந்த கால வரலாறு.  நமக்கு உரிய காவேரி நீரை திறந்து விடாமல் நம்மை வஞ்சித்தது தான் கடந்த கால அனுபவம். எனவே, பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளால் நமது ஜீவாதாரப் பிரச்சனையான காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் எந்தத் தீர்வையும் காண முடியாது. அவர்களால், நமக்குரிய காவேரி தண்ணீரை பெறவே இயலாது. இது அவர்களுக்கும் தெரியும். அப்படியானால், பி.ஜே.பி_உடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் நமக்குரிய காவேரி நதிநீர் கிடைக்காவிட்டாலும் கவலை இல்லை என்று முடிவு செய்துவிட்டார்களா? இதைவிட பெரிய துரோகம் வேறு என்ன இருக்க முடியும்?  இதைவிட பெரிய துரோகம் இருக்க முடியுமா?   
வாக்காளப் பெருமக்களே! காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் காங்கிரஸ், தி.மு.க., க்ஷதுட மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வரும் மக்களவை பொதுத் தேர்தலில் நீங்கள் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்) 
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் உயர்ந்துள்ளன. ஆந்திராவிலிருந்து சென்னைக்கு அரிசியை கொண்டு வருவதற்கு மட்டும் சுங்கச் சாவடி கட்டணமாக 
3,000 ரூபாயை லாரி உரிமையாளர்கள் செலுத்துகின்றனர்.  தற்போது இந்தக் கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு காரணமாக அரிசி விலை உயருமா? உயராதா? இதற்கு யார் காரணம்? மத்திய அரசு தானே?  இது கருணாநிதிக்கு தெரியாதா? ஆனால், விலைவாசி உயர்விலிருந்து சாமானிய மக்களைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. 
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

No comments:

Post a Comment