Saturday, April 05, 2014
இலங்கை::பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கித்துளக வருண 2014 தேசிய கண்காட்சி மற்றும் விற்பனை சந்தையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் சம்பிரதாயப்பூர்வமாக திறந்து வைத்தார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள சுதர்சி மண்டபத்தில் இன்றைய தினம் (04) மேற்படி சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நிகழ்விற்கு வருகை தந்திருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் வீரகுமார திசாநாயக்க, அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆகியோர் பிரதான வாயிலில் வரவேற்றனர். தொடர்ந்து பிரதான நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்ட அதிதிகள் மங்கள விளக்கேற்றினர்.
இதன்போது 50 கூடங்களில் காட்சிப்படுத்தும் வகையிலும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்த கித்துள் சார்ந்த உணவு மற்றும் உணவல்லாத உற்பத்திகளை பிரதம விருந்தினர் உள்ளடங்கிய குழுவினர் பார்வையிட்டதுடன், உற்பத்திகள் தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி, அவர்களது பிரச்சினைகள் மற்றும் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்ட அதேவேளை, அதிதிகள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
இதனிடையே கித்துள் சார்ந்த சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறைகளை மேம்படுத்தும் வகையில், தொழில் முயற்சியாளர்களை சக்திப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் இச் சந்தையை ஏற்பாடு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும், பிரதியமைச்சர் வீரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் மற்றும் அமைச்சின் துறைசார்ந்த அதிகாரிகளுக்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இதன்போது லக்சல நிலையத்திற்கு ஊடாக கித்துள் சார்ந்த பொருட்களை கொள்வனவு செய்யுமாறு அதன் தலைவர் அனில் கொஸ்வத்தவிடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
நாள்தோறும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை இக்கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட முடியும். இதன்போது, கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியூதீன், சிரேஸ்ட அமைச்சர் எ.எச்.எம் பௌசி, அமைச்சரின் ஆலோசகர் திருமதி ஜெகராஜசிங்கம் ஆகியோருடன், அமைச்சின் கீழான நிறுவனங்களினது தலைவர்கள், பொது முகாமையாளர்கள் உள்ளிட்ட வெளிநாடுகள் சிலவற்றின் தூதுவராலயங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




No comments:
Post a Comment