Pages

Sunday, April 27, 2014

தீவிரவாத தாக்குதலில் பலியான தமிழக ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்க்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு!

Sunday, April 27, 2014
சென்னை::காஷ்மீர் மாநிலத்தில் 6 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடை
பெறுகிறது.
அங்குள்ள சோபியான் மாவட்டத்தில், கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரி ஒருவர் உயிர் இழந்ததுடன், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த மாவட்டம் முழுவதும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அங்குள்ள கரேவா மலினோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாநில போலீசாரும், அசாம் ஆயுத படையினரும் நேற்று முன்தினம் இரவில் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதி தாக்கியதில் ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர்.
மேஜர் முகுந்தின் உடல் ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் இன்று  கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு இரவு கொண்டு வரப்படுகிறது.
நாளை (திங்கட்கிழமை) மேஜர் முகுந்தின் உடல் ராணுவ மரியாதையுடன் குரோம்பேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.தீவிரவாதிகள் தாக்குதலில் மேஜர் முகுந்த் பலியான சம்பவம், அவரது தந்தை வசிக்கும் கிழக்கு தாம்பரம் பேராசிரியர் காலனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தீவிரவாத தாக்குதலில் பலியான தமிழக ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்க்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment