Friday, January 03, 2014
இலங்கை::இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனுக்கு இங்குள்ள தமிழர்களைப் பற்றி எவ்வித அக்கறையோ கவலையோ இல்லை. அவர் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் வாழ் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காகவே இங்கு வந்து நடிக்கிறாரென பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நேற்று தெரிவித்தார்.
இலங்கை::இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனுக்கு இங்குள்ள தமிழர்களைப் பற்றி எவ்வித அக்கறையோ கவலையோ இல்லை. அவர் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் வாழ் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காகவே இங்கு வந்து நடிக்கிறாரென பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில் கனேடிய எம்.பி. ராதிகா இலங்கை பற்றி ஒரு அறிக்கையை பகிரங்கப்படுத்தினால் அது நிச்சயமாக நாட்டுக்கு எதிரானதாகவே அமையும் என்பதனால் அத்தகைய ஒருதலைப்பட்சமான கருத்துக்கள் சர்வதேச அரங்கில் எடுபடாது எனவும் அவர் கூறினார்.
ராதிகா சிற்சபேச னின் இலங்கை விஜயம் குறித்து பிரதி வெளிவிவகார அமைச்சரிடம் கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கனடாவில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாக்குப் பலத்தின் மூலமே இந்தப் பெண்மணி கனடிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆகவேதான் தமது வாக்காளர்களைத் திருப்தி செய்வதற்காக இவர் சுற்றுலா விஸாவில் இலங்கை வந்து இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என்றும் பிரதியமைச்சர் கூறினர்.
இலங்கையில் உள்ள அகதி முகாம்களின் ஒழிவு மறைவற்ற செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பும் இந்த கனடிய பாராளுமன்ற உறுப்பினர் இலங்கை அரசாங்கத்திடம் அதைப்பற்றி கேட்பதற்கு பதில் தமிழ் மக்களை அகதிகளாக்கிய எல்.ரி.ரி.ஈ யிடமே இதற்கான விளக்கத்தை கேட்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ராதிக சிற்சபேசனின் இலங்கை விஜயம் குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்த பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா இலங்கையில் தான் விரும்பிய இடம் எல்லாம் சென்று பார்ப்பதற்கு இவருக்கு அரசாங்கம் இடம் அளித்துள்ள போதிலும் இந்தப் பெண்மணி இனவாதப் போக்கில் செயற்படுவது வேதனை அளிக்கிறது என்றும் பிரதியமைச்சர் நியோமல் சுட்டிக்காட்டினார்.
ஜனநாயக சுதந்திரம் இலங்கையிலும் கனடாவிலும் கடைப்பிடிக்கப்படுகின்ற போதிலும் ராதிகா சிற்சபேசன் போன்ற கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் நாட்டில் ஜனநாயக செயற்பாடுகளை சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள். இவ்விரு நாடுகளிலும் ஜனநாயக சுதந்திரம் இருக்கின்ற போதிலும் இவ்விரு நாடுகளின் அரசாங்க நிர்வாக அமைப்பில் பாரிய மாற்றங்கள் இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையை பொறுத்தமட்டில் அரசியல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் ஒழிவு மறைவற்ற முறையில் நடதப்படுகிறது என்று தெரிவித்த பிரதி அமைச்சர் கனடாவில் வாக்காளர் தங்கள் மீது நம்பிக்கை வைக்கக்கூடிய முறையில் அரசியல்வாதிகள் நடந்து கொண்டு மக்களின் வாக்குகளைத் திருடுகிறார்கள் என்று கூறினார்.
ராதிகா சிற்சபேசன் திறந்த மனதுடன் இந்த விஜயத்தை இலங்கைக்கு மேற்கொள்ளவில்லை. அவர் ஏதோ ஒரு குறிக்கோளை அடிப்டையாக வைத்தே இங்கு வந்து எங்கள் நாட்டின் குறைபாடுகளை கண்டுபிடிப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார். எவ்வாறாயினும் இவர் இலங்கைக்கெதிராக கூறும் கருத்துக்கள் பக்கச்சார்புடையவை. ஆதலினால் இவை சர்வதேச அரங்கில் செல்லுபடியாகாது என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளையில் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று பரவி வரும் வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று பிரதி பொலிஸ் மா அதிபர் ரோஷான் டயஸ் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.
இந்தப் பெண்மணி யாழ்ப்பாணத்தில் சுதந்திரமாக நடமாடுவதுடன் தான் விரும்பிய அனைவரையும் சந்தித்துப் போசுவதற்கு நாம் தடைசெய்யவில்லை என்று அவர் கூறினார்.

No comments:
Post a Comment