Sunday, January 19, 2014

குழந்தைகள் உள்பட குடும்பத்தில் 4 பேரை கொன்று போலீஸ்காரர் தற்கொலை!

Sunday,January,19, 2014
லாஸ் ஏஞ்சல்ஸ்::அமெரிக்காவில் தனது 2 குழந்தைகள், மனைவி, மாமியாரை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
அமெரிக்காவின் உடா மாகாணம் லிண்டா நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஜோசுவா போரென் (34). இவருடைய மனைவி கெல்லி (32), மகன் ஜோசுவா (7), மகள் ஹாலே (5). இவர்களுடன் கெல்லியின் தாய் மேரி கிங் (55) என்பவரும் வசித்தார். இவர்கள் வசிக்கும் வீடு சால்ட் லேக் நகரத்தில் இருந்து ஊருக்கு வெளியே சுமார் 50 மைல் தொலைவில் அமைந்துள்ளது. ஜோசுவா போரென் ஸ்பானிஸ் போர்க் என்ற நகரத்தில் ரோந்து பணி அதிகாரியாக இருந்தார்.
 
கடந்த வெள்ளிக்கிழமை ஜோசுவா போரென் இரவு பணிக்கு வரவில்லை. மறுநாள் எதிர்பார்த்த போது அப்போதும் வரவில்லை. எந்த தகவலும் அவரிடம் இருந்து மேல் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. சந்தேகம் அடைந்த சக அதிகாரிகள் விரைந்து சென்று அவரது வீட்டை பார்வையிட்டனர். வீட்டின் உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டில் அனைவரும் இறந்து கிடந்தது தெரிந்தது.
 
இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வீட்டில் மனைவி, குழந்தைகள், மாமியார் மற்றும் ஜோசுவா அனைவரும் இறந்து கிடந்தனர்.விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக அனைவரையும் சுட்டு கொன்றுவிட்டு ஜோசுவா தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்தது.இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment