Saturday, December 07, 2013
புதுக்கோட்டை::இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜெகதாபட்டினம் மீனவர்கள் இன்றும், நாளையும் (7, 8–ந் தேதி) வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
இந்த வேலை நிறுத்தம் குறித்து ஜெகதாபட்டினம் மீனவர் சங்க தலைவர் குட்டி ஆண்டி கூறியதாவது:–
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மூலம் ஆயிரக் கணக்கான மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடி தொழில் செய்து வருகின்றோம்.
நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த தொழிலை நம்பி 10 ஆயிரம் பேர் உள்ளனர். ஆனால் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் எங்கள் மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்து சிறையில் அடைப்பதும், தாக்குதல் நடத்தி செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இது குறித்து பலமுறை நாங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் எடுத்துக் கூறியும் இதுவரை இதற்கு தீர்வு இல்லை. நேற்று முன்தினம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற வீரமணி, பாண்டியன், கிஷோர், தாமோதரன் ஆகிய மீனவர்கள் படகு கவிழ்ந்ததால் கடலில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர். அவர்களை இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக கூறி இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இது மனிதாபிமானம் அற்ற செயல்.
எனவே இலங்கை அரசை கண்டித்தும் மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காணவும், இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஜெகதா பட்டினம் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment