Thursday, December 12, 2013
இலங்கை::மன்னார் நானாட்டான் பிரதேச செயலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் முருங்கன் பொலீஸாரினால் கைது செய்யப்பட்ட 65 பேர்களில் 18 நபர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய சந்தேக நபர்களை 25,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்லுவதற்கும் மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பல்டேனோ
நேற்று மாலை உத்தரவிட்டுள்ளதாக முருங்கள் பொலீஸார் தெரிவித்தனர்.
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகத்தில் கடந்த திங்கட்கிழமை கூட்டம் ஒன்று இடம் பெற ஆயத்தமாக இருந்த வேளை, பிரதேச செயலகத்தினை ஆக்கிரமித்த குழுவொன்று கற்கலால் பிரதேச செயலகத்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தியும், பிரதேச செயலாளர் சந்திர அய்யாவை இலக்கு வைத்து தாக்கியது தொடர்பில் முருங்கன் பொலீஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து பொலீஸார் பிரஸ்தாப சந்தேக நபர்களை கைது செய்து இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தால் பிரதேச செயலகத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதேசத்தில் பெரும் பரபரப்பு நிலையேற்பட்டது.தாக்குதலை மேற்கொண்ட கும்பல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற வீடியோ நாடாவை வைத்து பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
அதே வேளை, இந்த தாக்குதலை கண்டித்து மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார், நானாட்டான், முசலி, மடு, மாந்தை ஆகிய பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் தொடராக பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் தாக்குதலை நடத்திய குண்டர்களை கைது செய்து உரிய நடவடிக்கையெடுக்குமாறும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தலைமையிலான குழுவினர், மன்னார் அரசாங்க அதிபர் தேசப்பிரியவை அவரது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து தமது நியாயங்களை தெரிவித்துள்ளனர். அப்போது மாவட்ட அரசாங்க அதிபர், தற்போது மாவட்டத்தில் சமாதான நிலை காணப்படுவதாகவும், அரச நிறுவனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினையடுத்து மாவட்டத்தின் சமாதான நிலையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் குறித்து எவரும் நியாயம் கற்பிக்க முயல்வதை தாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், காணி தொடர்பிலான அதிகாரங்கள் பிரதேச செயலாளர்களிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தன்னால் எவ்வித அளுத்தங்களையும் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அதே வேளை, நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் பூவரசங்குளம் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டதுடன், அம்மக்களுக்கு சொந்தமான காணிகள் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:
Post a Comment